மழையால் உங்க வாகனம் சேதமா? இதையெல்லாம் பாலோ செய்தா இன்சூரன்ஸ் ஈசியா கிடைக்கலாம்!
சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்த வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சாலையில் சென்ற ஏராளமான இருசக்கர வாகனங்கள் பழுதாகி நின்று விட்டன.
இதுபோல் புறநகர்பகுதியில் வீடுகள் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட கார் போன்ற வாகனங்களும் வெள்ளத்தில் மூழ்கி சேதம் அடைந்து விட்டன.
அவற்றை பழுது நீக்கி சரி செய்து மீண்டும் இயக்க வேண்டுமானால் பணத்தைக் கொட்டி செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இன்சூரன்ஸ் திட்டங்கள்:
எனவே, வாகனங்களுக்கு முழு இன்சூரன்ஸ் செய்தவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இழப்பீடு பெறலாம். இன்சூரன்ஸ் திட்டங்களில் "காம்பரஹன்சிவ்'' இன்சூரன்ஸ் என்ற முழு இன்சூரன்ஸ், 3 ஆம் நபர் இன்சூரன்ஸ் என இருவகை திட்டங்கள் உண்டு.

முழுக் காப்பீடு அவசியம்:
வாகனம் விபத்துக்குள்ளாகும் போதும் அதில் பாதிக்கப்படுபவருக்கும் இழப்பீடு வழங்கப்படும். முழு இன்சூரன்ஸ் எடுத்து இருந்தால் விபத்து, தீ, வெள்ளம், நில நடுக்கம், திருட்டு போன்றவற்றின் போது வாகன உரிமையாளர் இழப்பீடு கோரமுடியும். எனவே முழு இன்சூரன்ஸ் எடுத்திருந்தால் தான் மழை வெள்ள சேதத்துக்கு இழப்பீடு பெறமுடியும்.

30 லட்சம் மட்டுமே:
தமிழகத்தில் இன்சூரன்ஸ் செய்துள்ள 1.50 கோடி வாகனங்களில் 60 லட்சம் வாகனங்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் ஓடுகின்றன. இதில் 30 லட்சம் வாகனங்களுக்கு மட்டுமே முழு இன்சூரன்ஸ் உள்ளது.

இழப்பீடு கோரிக்கை:
தற்போது மழை வெள்ளத்தில் சேதம் அடைந்த 20 மோட்டார் சைக்கிள்கள், 30 கார்கள், 10 சரக்கு வாகனங்கள் ஆகியவற்றுக்கு இழப்பீடு கோரி ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் விண்ணப்பித்துள்ளனர். இதுபோல் மற்ற 25 காப்பீட்டு நிறுவனங்களிடமும் இழப்பீடு கோரி விண்ணப்பம் வந்துள்ளன.

பெறுவதற்கான வழிமுறைகள்:
இழப்பீடு பெறுவதற்கான வழிமுறைகளை நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. மழையில் பாதித்த வாகனத்தை பழுது பார்க்கும் மையத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். மெக்கானிக் சேதத்தை ஆய்வு செய்து உத்தேச செலவு அறிக்கை வழங்குவார், அதனுடன் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு சென்று அங்கு தரும் கிளைம் பார்ம் படிவத்தை பூர்த்தி செய்து உத்தேச செலவு அறிக்கையுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

வழங்கும் முறை:
பின்னர் சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனம் மதிப்பீட்டாளரை அனுப்பி வாகனத்தை ஆய்வு செய்யும். அவர் சேத அறிக்கை வழங்கியதும் இன்சூரன்ஸ் நிறுவனம் தான் ஒப்பந்தம் செய்துள்ள பழுது பார்க்கும் மையத்தில் வாகனத்தை ஒப்படைக்க பரிந்துரைக்கும். இல்லையெனில் தங்கள் விருப்பப்படியும் எங்கு வேண்டுமானாலும் சரிசெய்யலாம். வாகனம் தயாரிக்கப்பட்ட ஆண்டை பொறுத்து தேய்மான செலவை பிடித்துக் கொண்டு இழப்பீடு தொகை வழங்கப்படும்.

தவிக்கும் உரிமையாளர்கள்:
ஆனால் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மழையால் பாதித்த வாகனங்களுக்கு இழப்பீடு தர வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காகவே மழையில் வாகனம் இயக்க வேண்டாம் என பாலிசிதாரர்களின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றன. இதனால் சேதம் அடைந்த வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் கிடைக்குமா என வாகன உரிமையாளர்கள் தவிப்பில் உள்ளனர்.

முறையீடு செய்யலாம்:
இழப்பீடு கோரும் வாகனத்தை பழுது பார்க்கும் மையத்தில் வைத்து ஸ்டார்ட் செய்துவிட்டால் இழப்பீடு கோர முடியாது, முறையாக பிரீமியம் செலுத்தி வருபவர்களுக்கு மட்டுமே இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும். அவ்வாறு வழங்கவில்லை என்றால் இன்சூரன்ஸ் குறை தீர்க்கும் மையத்தில் பாலிசிதாரர்கள் முறையீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications