சென்னையில் பல இடங்களில் நெரிசல்... சில இடங்களில் சாலைகள் வெறிச்...
சென்னை: மிகப்பெரிய மழை, பெருவெள்ளத்திற்குப் பின்னர் சென்னையில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. பள்ளிகள் திறக்கப்படாவிட்டாலும் அலுவலகங்கள் செயல்படத்தொடங்கியுள்ளதால் திங்கட்கிழமை முதல் சாலைகளில் வாகனப்போக்குவரத்து தொடங்கியுள்ளது.
கடந்த ஒருமாதகாலமாக தட்டி எடுத்த மழையால் சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளன. ஆங்காங்கே ஏற்பட்டுள்ள மரண பள்ளங்கள்... சில இடங்களில் வடியாமல் தேங்கியுள்ள வெள்ளநீரும் வாகன ஓட்டிகளை சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது. பெரும்பாலான இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதே நேரத்தில் புறநகர் பகுதிகளில் பலரது வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இருசக்கர வாகனங்களும் பழுதாகிவிட்டதால் பலரும் வாகனங்களை விடுத்து இலவச பேருந்துகளில் பயணித்து வருகின்றனர். இதனால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசலின்றி காணப்பட்டது.
சாலைகளில் நெரிசல்
சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக பல இடங்கள் வெள்ளநீரால் சூழப்பட்டு சென்னையே தீவு போல் காட்சியளிக்கிறது. கடும் மழையால் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக மாறி உள்ளது. திங்கட்கிழமை முதல் சென்னையில் மழை படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது. இதனால், சென்னையில் இயல்புநிலை சற்று திரும்பி வருகிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள பல சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வடபழனி சாலையில் நெரிசல்
ஒரு வாரத்துக்குப் பின் அலுவலகம் திரும்புவோர் பழுதான சாலைகளில் சிக்கி தவித்து வருகின்றனர். அண்ணா நகர், முகப்பேர், அரும்பாக்கம், கோயம்பேடு, வடபழனி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
சிக்னல்கள் பழுது
பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். பெரும்பாலான இடங்களில் சிக்னல் பழுது மற்றும் போக்குவரத்துக் காவலர்கள் இல்லாததால் சிரமம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
வடியாத வெள்ளம்
ஆற்காடு சாலையில் வடபழனியில் இருந்து போரூர் வரை செல்லும் பகுதியில் வெள்ளம் இன்னும் வடியவில்லை. விருகம்பாக்கம், ஆழ்வார் திருநகர், வளசரவாக்கம், லட்சுமிநகர் பகுதியில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. பள்ளம் காரணமாக இந்த சாலையில் சில இடங்களில் வெள்ளம் அதிகமாக காணப்படுகிறது. வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள கோவில் குளம் முழுவதும் நிரம்பி தண்ணீர் வெளியே காணப்படுகிறது.
முழங்கால் அளவு வெள்ளம்
இந்த பகுதியிலும், விருகம்பாக்கத்திலும் முழங்கால் அளவுக்கு வெள்ளம் காணப்படுகிறது. மேலும் இந்த பகுதிகளில் உள்ள குடியிருப்பு தெருக்களிலும் தண்ணீர் வடியவில்லை. இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வாகன ஓட்டிகள் சிரமம்
விருகம்பாக்கம், வளசரவாக்கம் சாலைகளில் வெள்ளம் தேங்கி இருப்பதால் வடபழனி - போரூர் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள்.
மரண பள்ளங்கள்
அந்த சாலையில் வெள்ளத்தோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இரண்டு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். பரபரப்பான நேரத்தில் இந்த சாலையில் போக்கு வரத்துபாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.
போரூர் ரவுண்டான பகுதியில் வெள்ளம் வடிந்துள்ளதால் சிறிய பள்ளங்கள் மூடப்பட்டு வருகின்றன. ஆனால் பெரிய பள்ளங்களால் போக்கு வரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நீரில் மூழ்கிய வாகனங்கள்
மழை வெள்ளத்தால் பெரும்பாலானவர்களின் வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளன. புறநகரில் வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர் எனவே இயல்பு நிலை திரும்பிய பின்னரே பலரும் சென்னை திரும்புவார்கள் என்பதால் அண்ணாசாலையில் வழக்கமான நெரிசல் இன்றி வாகனங்கள் எளிதாக சென்று வரமுடிகிறது.
சென்னை மீண்டு வரும்
சென்னையில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை மூடவும் செப்பனிடும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எனவே, சென்னை விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.