வாழை இலைக் குப்பைகளை அகற்ற 3 கன்றுக்குட்டிகள் வாங்கிய வேலூர் மாநகராட்சி!
வேலூர்: வேலூரில் வாழை இலை குப்பைகளை அகற்ற 3 கன்றுக் குட்டிகளை வாங்கியுள்ளது அம்மாநகராட்சி அரசு.
வேலூர் மாநகராட்சியில் 42 இடங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இதேபோல் காட்பாடி காந்திநகரில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு குப்பைகளில் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், காய்கறி கழிவுகள், அட்டைகள், பேப்பர்கள் என தனித்தனியாக பிரிக்கப்பட்டு வருகிறது.
காய்கறி கழிவுகள்:
காய்கறி கழிவுகள் மூலம் இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இதற்கு மாட்டு சாணம் தேவைப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள், அட்டைகள், பேப்பர்கள் விற்பனை செய்ததன் மூலம் ரூபாய் 17 ஆயிரம் வருமானம் கிடைத்தது. இந்த வருமானத்தை கொண்டு கடந்த வாரம் பொய்கை மாட்டு சந்தையில் 3 கன்றுக்குட்டிகள் வாங்கப்பட்டுள்ளன.
பிளாஸ்டிக் தார் சாலை:
சேகரிக்கப்படும் வாழை இலைகள் இந்த கன்று குட்டிகள் மூலம் அழிக்கப்படும். பிளாஸ்டிக் பைகள் தண்ணீரில் கழுவப்பட்டு, பின்னர் உலர்த்தப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் பைகளை தூள் செய்வதற்காக எந்திரம் உள்ளது. அதன் மூலம் பிளாஸ்டிக் பொருட்கள் தூளாக்கப்படுகின்றன. இதனை வைத்து பிளாஸ்டிக் தார் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுகாதார சீர்கேடு இல்லை:
இதுகுறித்து, "திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, அவை தரம் வாரியாக பிரிக்கப்படும். அதன்பின்னர் அவை உரமாக மாற்றப்படும். இதனால் துர்நாற்றம், சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புகள் இல்லை.
உரம் தயாரிக்க முடிவு:
காந்திநகரில் குப்பைகள் தரம் வாரியாக பிரிக்கப்பட்டு பிளாஸ்டிக் பாட்டில்கள், அட்டைகள் ஆகியவற்றை விற்பனை செய்ததன் மூலம் ரூபாய் 17 ஆயிரம் வருமானம் பெற்று, 3 கன்றுக்குட்டிகள் வாங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் உரம் தயாரிக்க சாணம் கிடைத்துள்ளது. பொதுமக்களும் தங்கள் வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து கொடுத்தால் நன்றாக இருக்கும்" என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.