பனியனுடன் அங்கப் பிரதட்சணம் செய்த அமைச்சர்.. மண் சோறு சாப்பிட்ட பெண் மேயர்.. ஜெ.வுக்காக!
திருப்பூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி, அமைச்சர் ஆனந்தன் கோவிலில் அங்கப்பிரதட்சனம் செய்தார். வேலூர் மேயர் கார்த்தியாயினி மஞ்சள் சேலை அணிந்து கோவிலில் மண் சோறு சாப்பிட்டு பயபக்தியுடன் பிரார்த்தனை செய்தார்.
திருச்சியிலோ ஒரு தொண்டர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஜெயலலிதாவுக்காக அதிமுகவினர் தொடர்ந்து விதம் விதமாக போராடி வருகின்றனர். மண் சோறு சாப்பிடுகிறார்கள், கோவிலில் தரையில் படுத்து உருண்டு அங்கப்பிரதட்சனம் செய்கிறார்கள், தற்கொலை செய்து கொண்டு மரணத்தைத் தழுவுகிறார்கள்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அவினாசியில் உள்ள அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் அ.தி.மு.க.வினர் அங்கபிரதட்சணம் செய்தனர்.
வேட்டி, பனியன் அணிந்து கோவில் பிரகாரத்தில் வரிசையாக அங்கபிரதட்சணம் செய்தனர். பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இதில் கருப்பசாமி எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் செல்லியம்மன் கோவிலில் மேயர் கார்த்தியாயினி தலைமையில் அ.தி.மு.க.வினர் மண்சோறு சாப்பிட்டனர். இதில் துணை மேயர் தருமலிங்கம் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
விட்டத்தில் தூக்குப் போட்டு தொங்கிய நடராஜன்
திருச்சியை அடுத்த கோனார் சத்திரம் அண்ணா காலனியை சேர்ந்தவர் நடராஜன் (34). அ.தி.மு.க. கிளை செயலாளராக இருந்தார். ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதில் இருந்து மனவேதனையுடன் இருந்த அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் விட்டத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.