வேலூர் கோவில் உண்டியலில் செல்லாகாசுகள்... ரூ. 44 லட்சம் டெபாசிட் செய்த 'கறுப்பு' பக்தர் யார்?
வேலூரில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் உண்டியலில் தடை செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்கட்டுகளை ஒருவர் போட்டுவிட்டு சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வேலூர்: கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக புழக்கத்தில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று நவம்பர்8ம் தேதி அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. கறுப்பு பணத்தை பதுக்கியவர்களுக்கு இது மரண அடியாக இருந்தலும், சாமான்ய மக்களின் அன்றாட வாழ்க்கையை அப்படியே புரட்டி போட்டு விட்டது என்றுதான் கூற வேண்டும்.
செல்லாத நோட்டுக்களுக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மற்றும் அஞ்சலகங்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மக்கள் தங்களிடம் உள்ள பணங்களை மாற்றி வருகின்றனர். பெரும்பாலானவர்கள் தங்கள் கைவசம் உள்ள பணத்தை டெபாசிட் செய்து வருகின்றனர். மக்கள் செலுத்தும் தொகையை பொறுத்து வரியும், 200 சதவிகிதம் வரை அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏராளமான கறுப்பு பண முதலைகள் தாங்கள் பதுக்கி வைத்த பணத்தை கிழித்தும், சிலர் எரித்து வருகின்றனர். இன்னும் சிலரோ ஆற்றில் மிதக்க விடுகின்றனர். குப்பைகளிலும், சாலை ஓரங்களிலும் பணத்தை கொட்டிச் செல்கின்றனர்.
இந்நிலையில், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் உண்டியலில் ஒருவர் ரூ. 44 லட்சம் போட்டுள்ளார். வழக்கமாக நாள்தோறும் உண்டியல் பணம் எண்ணப்படுவது வழக்கம். அவ்வாறு உண்டியல் திறக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டபோது ஆயிரம் ரூபாய் கட்டுகள் 30 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கொண்ட 28 கட்டுகள். உண்டியலில் போட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் அபராத தண்டனைக்கு பயந்து உண்டியலில் செல்லாத நோட்டுக்களை போட்டுச்செல்கின்றனர் என்பதால் உண்டியலில் பணம் போடுபவர்களை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.