காவிரி பிரச்சனையை திசை திருப்ப பரம்பிக்குளம் அணையில் அதிகாரிகள் மீது தாக்குதல்- வேல்முருகன் புகார்
சென்னை: பரம்பிக்குளம் அணையில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி பிரச்சனையை திசை திருப்ப கேரளா வனத்துறையில் உள்ள கர்நாடகாவைச் சேர்ந்த அதிகாரி அஜய் திட்டமிட்டு சதி செய்வதாகவும் வேல்முருகன் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வேல்முருகன் இன்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்துக்கு சொந்தமான பரம்பிக்குளம் ஆழியாறு அணை கேரளா எல்லையில் உள்ளது. இந்த அணையின் பரமாரிப்புப் பணிக்காக தமிழக பொதுப்பணித்துறைகள் சென்று வருவது வழக்கம்.
இந்த நிலையில் அணையின் பராமரிப்புப் பணிக்கு வழக்கம் போல தமிழக அதிகாரிகள் சென்றனர். ஆனால் அவர்களை உள்ளே நுழையவிடாமல் கேரளா வனத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளனர்.
இதனைத் தட்டிக்கேட்ட பொதுமக்களையும் கேரளா கேடர் ஐஎப்எஸ் அதிகாரி அஜய் தலைமையிலான குழுவினர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் பொதுமக்களும் வனத்துறை அதிகாரிகளும் படுகாயமடைந்தனர். இது மிகவும் வன்மையான கண்டனத்துக்குரியது.
இதனால் பொள்ளாச்சி எல்லையில் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது. எந்த ஒரு காரணமுமே இல்லாமல் கர்நாடகாவைச் சேர்ந்த கேரளா கேடர் அதிகாரி அஜய் தலைமையிலான குழுவினர் தமிழக அதிகாரிகள், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.
இது காவிரி நதிநீர் பிரச்சனையை திசை திருப்பி கேரளாவுடன் மோதல் போக்கை உருவாக்கிவிடும் சதித்திட்டமாக தெரிகிறது. ஏனெனில் இத்தாக்குதலை நடத்திய அதிகாரி கர்நாடகாவில் பிறந்து வளர்ந்து படித்தவர். அவர் கேரளா பேட்ஜ் அதிகாரியாக இருந்தாலும் கன்னடவெறியுடன் இப்பிரச்சனையை அணுகியிருக்கிறார்.
ஆகையால் கேரளா- தமிழக உறவை சீர்குலைக்கும் சதியுடன் செயல்பட்ட அதிகாரி அஜய்யை கேரளா அரசு உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications