மோடி, ஓ.பி.எஸ், அமைச்சர் மாஃபா மூவரின் பேச்சும் பொறுப்பற்றது: வேல்முருகன் பாய்ச்சல்
பிரதமர் மோடி, துணை முதல்வர் ஓ.பி.எஸ், அமைச்சர் மாஃபா மூவரின் பேச்சும் பொறுப்பற்றது என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை : லோக்சபாவில் பிரதமர் மோடி மற்றும் நியூட்ரினோ திட்டத்தை ஆதரித்து தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் பொறுப்பற்ற முறையில் பேசி வருவதாக வேல்முருகன் குற்றம்சாட்டி உள்ளார்.
லோக்சபாவில் நேற்று மோடியின் பேச்சை குறிப்பிட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், ஊடகத்தையும் நாடாளுமன்றத்தையும் தவிர்த்துவந்தவர் பிரதமர் நரேந்திர மோடி. ஊடகத்தில் மக்களின் கேள்விகளையும் நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளின் கேள்விகளையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பதுதான் காரணம்.

குஜராத்தில் தோல்வி
பிரதமர் வேட்பாளராக அவரது சொல்லுக்கும், பிரதமரான பின் அவரது செயல்பாட்டுக்கும் எந்தத் தொடர்புமில்லை. அதன் பலனை, தன் சொந்த குஜராத் மாநிலத்திலேயே அண்மையில் நடந்த பொதுத்தேர்தலில் அறுவடை செய்தார் மோடி.

பீதியில் நாடாளுமன்றத்தில்
அதன் பின் ராஜஸ்தானிலும் மேற்கு வங்கத்திலும் நடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற இடைத்தேர்தல்களில் மண்ணைக் கவ்வினார். இனி என்ன செய்வது என்ற பீதியில்தான் நாடாளுமன்றத்திற்கு வந்தார்.

வெறும் பேச்சு
குடியரசுத்தலைவர் உரை மீதான தனது உரையை ஆற்றினார். ஆனால் அது உரை அல்ல; காங்கிரஸ் மீதுள்ள கறை! வசையாக வெளிப்பட்ட வெறும் பேச்சு, வெறுப்புப் பேச்சு. பொறுப்பற்ற பேச்சு, பொருளற்ற பேச்சு, பொய்ப் பேச்சு.

மாஃபா பேச்சு
சொல்லப்போனால் குடியரசுத்தலைவர் உரைக்குத் தொடர்பே இல்லாத வீண்பேச்சு! இவர் இப்படியென்றால், இவரின் தீவிர பக்தர்கள் எப்படி? நியூட்ரினோ திட்டத்தால் தமிழகத்தில் ஏராளமாக வேலைவாப்புகள் உருவாகும் என்கிறார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

நியூட்ரினோவுக்கு ஆதரவு
நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்துவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஆய்வில் தெரியவந்திருக்கிறது; பதுகாப்பான முறையில் செயல்படுத்தப்படவிருக்கும் இந்தத் திட்டம் மிகவும் அவசியமானது என்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

குஜராத்தில் அனுமதி இல்லை
நியூட்ரினோ திட்டத்தை மலைப்பகுதிகள் மிகுந்த அசாம் மாநிலத்திலேயே அனுமதிக்கவில்லை. மோடியின் குஜராத் மற்றும் நமது அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளாவும்கூட அனுமதிக்கவில்லை. அப்படியிருக்க, இளிச்சவாய்த் தமிழ்நாடு மோடியின் தீவிர ஆதரவாளர்கள் தமிழ்நாடு அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட பிறகுதான் மக்கள் போராட்டத்தின் காரணமாக, சுற்றுச்சூழல் தீர்ப்பாயமும் அனுமதி மறுத்த, நேற்று வரை பேச்சுமூச்சற்றுக் கிடந்த இந்த நியூட்ரினோ திட்டத்தை மீண்டும் தூக்கி எடுத்துத் திணிக்கப் பார்க்கிறார்கள். அதற்கான பேச்சுக்கள்தான் மாஃபா-ஓபிஎஸ் பேச்சுக்கள்! இதை அவர்கள் தவிர்க்க வேண்டும் என்று வேல்முருகன் குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications