5 மீனவர்களை காப்பாற்ற எடுத்த முயற்சியும், ராஜதந்திரங்களும் பாராட்டுக்குரியது: மோடிக்கு விஜய் கடிதம்
சென்னை: இலங்கை சிறையில் வாடிய 5 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
2011ம் ஆண்டு நவம்பர் மாதம் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த எமர்சன், வில்சன், அகஸ்டஸ், பிரசாத், லாங்லெட் ஆகிய 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்து அழைத்துச் சென்றது. போதைப் பொருள் கடத்தியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கொழும்பு உயர் நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது.
இந்நிலையில் மத்திய அரசு எடுத்த முயற்சியால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு ஊர் திரும்புயுள்ளனர். இது குறித்து நடிகர் விஜய் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த எமர்சன், வில்சன், அகஸ்டஸ், பிரசாத், லாங்லெட் ஆகிய 5 மீனவர்களுக்கும் கொழும்பு உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்திருந்தது.
மேற்கண்ட மீனவர்களின் உயிரைக் காப்பாற்ற தாங்கள் எடுத்த முயற்சிகளும், ராஜ தந்திரங்களும் மிகுந்த பாராட்டுக்குரியது. 5 மீனவர்களின் விடுதலையால் 5 குடும்பங்கள் மட்டும் சந்தோஷமடையவில்லை. ஒட்டுமொத்த தமிழகமே சந்தோஷம் அடைந்துள்ளது.
தினசரி கடலுக்குள் சென்று மீன் கிடைத்தால் மட்டுமே வாழ்க்கை என்று போராடுபவர்கள் மீனவர்கள். இப்படி தினம் தினம் வாழ்க்கையுடன் போராடும் மீனவர்களுக்கு இப்படி தேவையற்ற தொந்தரவுகள் மேலும் பயத்தையும், அச்சுறுத்தலையும் தரும்.
இந்த சமூக மக்கள் இனி வருங்காலத்திலாவது பயமின்றி நிம்மதியாக தொழில் செய்ய தகுந்த பாதுகாப்பை ஏற்படுத்தித்தர தாங்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்று இதன்மூலம் வேண்டுகோள் வைக்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.