ஐடி ரெய்டுக்கு உள்ளான அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி பறிப்பு இல்லை.. டிடிவி தினகரன் திட்டவட்டம்
விஜயபாஸ்கர் பதவியை பறிப்பது தொடர்பாக முதல்வர் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், விஜயபாஸ்கர் ஐடி அதிகாரிகள் விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாக டிடிவி தினகரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை: விஜயபாஸ்கரிடமிருந்து அமைச்சர் பதவியை பறிக்கும் திட்டம் இல்லை என்று அதிமு அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். சென்னையில் நிருபர்களிடம் பேசியபோது இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள விஜயபாஸ்கர் ஐடி ரெய்டில் சிக்கியுள்ளார். அவரிடம் சுமார் 6 மணிநேரம் நேரில் விசாரணை நடத்தியிருந்தனர் அதிகாரிகள்.
பல்வேறு ஆவணங்கள் அவரது வீடு, மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 7ம் தேதி இந்த ரெய்டு நடந்துகொண்டிருந்தபோது, விஜயபாஸ்கர் வீட்டிலிருந்த ஒரு ஆவணத்தை அவரது டிரைவர் வெளியே தூக்கி எறிந்தார்.
இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். விஜயபாஸ்கர் பதவியை பறிப்பது தொடர்பாக முதல்வர் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகின. விஜயபாஸ்கர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் டிடிவி தினகரன் இன்று இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் விஜயபாஸ்கர் ஐடி அதிகாரிகள் விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாகவும் தினகரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.