அமைச்சர் விஜயபாஸ்கர் கைதாகிறார் ? - 3 துறை அதிகாரிகள் ஆலோசனை
அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி 3 துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். அவர் விரைவில் கைதாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதால் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் 3 துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
சிபிஐ உயரதிகாரிகள், அமலாக்கப் பிரிவு, வருமானவரித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் விஜயபாஸ்கருக்கு வருமானவரித்துறையின் பிடி மேலும் இறுகும் என்று தெரிகிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் எழுந்தது. அமைச்சர் விஜயபாஸ்கர் மீதுதான் அதிக அளவில் புகார்கள் தேர்தல் ஆணையத்திற்கு சென்றன.
ஐடி ரெய்டு
அமைச்சர் விஜயபாஸ்கரை கண்காணித்த வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென கடந்த 7ஆம் தேதி ரெய்டு நடத்தினர். சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அ.தி.மு.க முன்னாள் எம்பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் அதே நாளில் அதிரடிச் சோதனை நடத்தினர்.
ரொக்கப் பணம், ஆவணங்கள்
இந்தச் சோதனையின்போது, விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து ஏராளமான ஆவணங்கள் மற்றும் அவரின் உறவினர்கள் வீட்டில் இருந்து கோடிக்கணக்கான ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டன. சரத்குமார் வீட்டில் இருந்தும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதில் ஆர்கே.நகரில் ரூ. 89 கோடி வரை பணவரிவர்த்தனை செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கின. ஊடகங்களிலும் பட்டியல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
வருமான வரித்துறை விசாரணை
இதனையடுத்து வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது அதனை ஏற்று அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர், கடந்த 10ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். பல மணி நேரம் நடந்த விசாரணையில் நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. 5 மணி நேரமாக நடந்த விசாரணையில் விஜயபாஸ்கர் சரியாக பதிலளிக்காததால் மீண்டும் விசாரிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.
நடவடிக்கை பாய்கிறது
இதனிடையே சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ உயரதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். விஜயபாஸ்கர் மீது மிகப்பெரிய அளவில் நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் கைதாகக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.