விஜயகாந்த் ஹெல்த் அப்டேட்.. பஞ்ச் வசனங்கள் பேசிய 'கேப்டனுக்கு' இப்போ நடக்கிறது பேச்சு பயிற்சி!
சென்னை: தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், முன்பு போல தீவிர அரசியலில் தலைகாட்ட நினைக்கிறார். ' பேச்சு, பேட்டி அறிக்கைகள் என ஆர்வத்தை வெளிப்படுத்தினாலும், அவருடைய உடல்நிலை முன்புபோல ஒத்துழைப்பதில்லை' என்கின்றனர் தே.மு.தி.க நிர்வாகிகள்.
சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் தி.மு.க, அ.தி.மு.கவுக்கு எதிராக மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தார் விஜயகாந்த். பிரசார நேரத்தில் அவருடைய மேனரிசங்களால் கலவரப்பட்டனர் ம.ந.கூ தலைவர்கள்.
தேர்தல் தோல்விக்குப் பிறகு அவருடைய உடல்நிலை குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியானது. 'சிங்கப்பூரில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுவிட்டு, கறுப்பு போர்வை போர்த்தியபடி விமான நிலையத்தைவிட்டு அவரைக் கூட்டிச் சென்றனர்' என்றெல்லாம் தகவல்கள் வெளியானது. இதன்பிறகு, 'அவரது உடல்நலனில் என்னதான் பிரச்னை?' என்ற கேள்விக்கு அவருடைய குடும்பம் எந்தப் பதிலையும் தெரிவிக்கவில்லை.

மருத்துவமனையில் சிகிச்சை
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். தொண்டர்கள் யாரும் அவரைப் பார்க்க வர வேண்டாம் எனத் தலைமைக் கழகத்தில் இருந்து அறிக்கை வெளியானது. மருத்துவமனையில் சிறுநீரகம் தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தகவல் பரவியது.

முன்னேற்றம்
தற்போது அவருடைய உடல்நிலை குறித்து நம்மிடம் பேசிய தே.மு.தி.க நிர்வாகி ஒருவர், " மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஸ் ஆன பிறகு, அவரது உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பழைய கேப்டனாக வலம் வருவார் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லத் திட்டமிட்டபோது, அவருடைய உறவினர்கள் யாரும் போதிய ஒத்துழைப்பை அளிக்கவில்லை. இருப்பினும், சென்னையில் இருந்தபடியே உடல்நிலையை சீராக வைத்துக் கொள்ளலாம் என மருத்துவர்கள் கூறிய ஆலோசனையை பிரேமலதா ஏற்றுக் கொண்டார்.

மதுர வீரன் ஷூட்டிங் ஸ்பார்ட்
கடந்த சில நாட்களாக அவருடைய மகன் சண்முகபாண்டியன் நடித்து வரும் 'மதுர வீரன்' படத்துக்கான வேலைகளில் ஆர்வம் காட்டி வருகிறார் கேப்டன். ஷூட்டிங் ஸ்பாட்டில், ஆடை வடிவமைப்பாளர் உள்பட பலரையும் அழைத்து சைகையால் ஏதோ விளக்குகிறார். முன்பு போல வார்த்தைகளை அவரால் சரியாக உச்சரிக்க முடியவில்லை. சொல்ல நினைப்பதை சைகையால் விளக்க முயல்கிறார்.

பேச்சு பயிற்சி
வீட்டில் தினமும் பேச்சுப் பயிற்சி செய்து வருகிறார். எங்கு சென்றாலும், யாராவது உடன் இருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி, வீட்டிலேயே இயந்திர நடைப் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். வாரத்தில் இரண்டு நாட்கள் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வீட்டுக்கே வந்து சிகிச்சை அளிக்கிறார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலத்தில், அவருடைய பழைய நண்பர்களை அடையாளம் கண்டு கொள்ளவே சிரமப்பட்டார். இப்போது அப்படி ஒரு நிலை இல்லை.

பழைய கேப்டன்
பேச்சு மற்றும் நடைப் பயிற்சியில் தெளிவாகிவிட்டால், பழைய கேப்டனைப் பார்க்கலாம். உள்ளாட்சித் தேர்தலுக்குள் அவரை சீர்படுத்தும் வேலைகளில் ஆர்வம் காட்டி வருகிறார் பிரேமலதா. இயல்பிலேயே தன்னம்பிக்கை அதிகமுள்ள விஜயகாந்தும், சிகிச்சை முறைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்" என்றார் விரிவாக.












Click it and Unblock the Notifications