த்தூ பேச்சு... விஜயகாந்த் பகிரங்க மன்னிப்பு கேட்க பத்திரிகையாளர்கள் வலியுறுத்தல்
சென்னை: பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மன்னிப்பு கோர வேண்டும் என பத்திரிகையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை, அடையாறு, மத்திய கைலாஷ் பகுதியில் நேற்று தேமுதிக சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. அதற்கு வந்த விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் ஒருவர் கேட்ட கேள்வியால் ஆத்திரமடைந்த விஜயகாந்த், செய்தியாளர்களை நோக்கி காரித் துப்பி, தரக்குறைவாக பேசினார்.
விஜயகாந்தின் இந்த செயலுக்கு பத்திரிகையாளர்கள் மத்தியில் எதிர்ப்பும், கண்டனமும் வலுத்து வருகின்றன. இது தொடர்பாக அவர் பத்திரிகையாளர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டுள்ளது.
வேதனைக்குரியது...
இது தொடர்பாக சென்னை பிரஸ் கிளப் இணை செயலாளர் பாரதி தமிழன் கூறுகையில், "விஜயகாந்த் காரித் துப்பியது பத்திரிகையாளர்களை பார்த்து அல்ல; மாறாக, அனைத்து ஊடகங்களின் முகத்தில் என்றே கருதுகிறோம். விஜயகாந்த், தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் என்பது வேதனைக்குரியது.
பகிரங்க மன்னிப்பு...
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளும் விஜயகாந்த், தன் செயலுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்; மன்னிப்பு கேட்காத வரை, அவர் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
சும்மா விடக் கூடாது...
சென்னை பத்திரிகையாளர் சங்கத் தலைவர் அன்பழகன் இது குறித்து கூறுகையில், "தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன் நிலை மறந்து, பொது இடங்களில் நடந்து கொள்கிறார். ஊடகவியலாளர்களிடம் அவர் அநாகரிகமாக நடந்து கொள்வது தொடர்கதையாகி விட்ட நிலையில், காரித் துப்பும் அளவுக்கு, அவருக்கு துணிச்சல் வந்துள்ளது. அதனால், அவரை இனியும் சும்மா விடக்கூடாது; அவர் மன்னிப்பு கோரும் வரையில், அவருக்கு எதிராக பத்திரிகையாளர்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்..
கண்டனம்...
இதேபோல், விஜயகாந்தின் செயலுக்கு பல்வேறு அமைப்புகளும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. செய்தியாளர்களை கண்ணியக்குறைவாக நடத்திய விஜயகாந்த் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம் வலியுறுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவருக்கு நல்லதல்ல...
இது தொடர்பாக தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பத்திரிகையாளர் மத்தியில் நாக்கை துருத்துவதும், காறி துப்புவதும் ஒரு கட்சித் தலைவருக்கு நல்லதல்ல என்றும், இனியும் தன்னை திருத்திக் கொள்ளாமல் நடந்து கொண்டால், அவர் பாணியிலேயே பொதுமக்கள் காறி துப்பும் நிலை ஏற்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளைத் தவிர்ப்போம்...
விஜயகாந்த் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் தொடர்பான செய்திகளை தவிர்க்கவும் ஊடக நிறுவனங்கள் தயங்கக்கூடாது என சென்னை பிரஸ் கிளப் வலியுறுத்தியுள்ளது.
போராட்டம்...
தனது செயலுக்கு விஜயகாந்த் மன்னிப்பு கேட்காவிட்டால், பத்திரிகையாளர்களை ஒருங்கிணைத்து அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
உறுதிமொழிக்கு எதிரானது...
விஜயகாந்தின் நடவடிக்கை, ஜனநாயகத்தின் மீது பற்றுள்ளவனாக இருப்பேன் என அவர் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிரானது. அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோம் என புதுச்சேரி செய்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
செய்தியாளர்களிடம் சாடிய விஜயகாந்த்...செய்தியாளர்களை கடுமையாக சாடிய விஜயகாந்த்...2016-ல் அதிமுக ஆட்சியை பிடிக்காது: விஜயகாந்த் பேட்டி...http://bit.ly/1mcrPoq
Posted by PuthiyaThalaimurai TV on Sunday, December 27, 2015
உச்சகட்ட அவமரியாதை...
இது தமிழக ஊடகங்கள் மீது நடத்தப்பட்ட உச்சகட்ட அவமரியாதை என டெல்லி தமிழ் பத்திரிக்கையாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.