விஜயகாந்த்துக்குத் தமிழில் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு இல்லையாம்.. சுந்தரராஜன் சொல்வதைக் கேளுங்க!
மதுரை: தேமுதிக தலைவர் விஜயகாந்த், ரமணா படத்தில் தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு என்று வசனம் பேசியிருப்பார். ஆனால் அவருடைய நிழலாக பல காலம் இருந்தவரும், மதுரை மத்திய தொகுதி தேமுதிக எம்.எல்.ஏவும், தற்போது அதிமுக ஆதரவு எம்.எல்.ஏவாக இருப்பவருமான சுந்தரராஜன், விஜயகாந்த்துக்குத் தமிழில் பிடிக்காத வார்த்தை நன்றி என்று கூறியுள்ளார்.
மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பழங்காநத்தத்தில் அ.தி.மு.க. அரசின் 3 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. அதில் அமைச்சர் பா. வளர்மதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் சுந்தரராஜனும் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், விஜயகாந்த்துக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை நன்றி. எனவே தான் புரட்சித் தலைவி அம்மாவால் பெற்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகாமல் ஒட்டி கொண்டு இருக்கிறார்.
நானும் பல முறை சொல்லி பார்த்துவிட்டேன். நீயும் பதவியில் இருந்து விலகு, எங்களையும் கட்சியில் இருந்து நீக்கு என்றேன். ஆனால் எதையும் விஜயகாந்த் செய்யவில்லை. மின் கட்டண உயர்வு குறித்து சட்டசபையில் பேச துணிவு இல்லாதவர் விஜயகாந்த் என்றார் சுந்தரராஜன்.
மதுரை மாநகராட்சி மேயர் ராஜன்செல்லப்பா பேசுகையில், கடந்த சட்டசபைத் தேர்தலில் அம்மா கொடுத்த பதவியை வைத்து கொண்டு விஜயகாந்த் தற்போது மக்களை ஏமாற்றுகிறார்.
மதிமுக, பாமக, தேமுதிக கட்சிகளுக்கு அங்கீகாரம் தந்தவர் அம்மா. அம்மா நினைத்தால் ஒரு இயக்கம் வளரும், மதுரை மாநகராட்சியில் பாமக, கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கூட உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் தேமுதிகவுக்கு ஒருவர் கூட இல்லை. மதுரைக்காரன் என்று சொல்லும் விஜயகாந்தின் தேமுதிக கட்சியின் நிலை இதுதான் என்றார் செல்லப்பா.