ஜெயலலிதா அவதூறு வழக்குகள் தொடர்ந்தது விஜயகாந்துக்கு நல்லதாப் போச்சாம்!
ஈரோடு: ஜெயலலிதா என் மீது அவதூறு வழக்கு மேல் வழக்கு தொடர்கிறார். அந்த வழக்குகள் சம்பந்தமாக நான் செல்லும் இடங்களில் அதை தேர்தல் கூட்டமாக ஆக்கிவிடுகிறேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபியில் தேமுதிக சார்பில் மக்களுக்காக மக்கள் பணி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு 151 பேருக்கு ரூ. 25 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில்,
அதிமுக
கடந்த காலத்தில் ஒரு தொகுதியைக் கூட கைப்பற்ற முடியாமல் இருந்த அதிமுக மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. அது போன்று நாங்களும் வரும் தேர்தலில் வெற்றி பெறுவோம்.
காவல் துறை
நீதிமன்றத்திற்கு மத்திய அரசு காவல்துறையின் பாதுகாப்பு ஒன்றும் தேவை இல்லை என்கிறது அதிமுக அரசு. ஆனால் முதல்வர் ஜெயலலிதாவே தமிழக காவல்துறையை நம்பாமல் தான் தன் பாதுகாப்புக்கு கருப்பு பூனை படையை வைத்துள்ளார்.
வழக்கு
அவர் என் மீது அவதூறு வழக்கு மேல் வழக்கு தொடர்கிறார். அந்த வழக்குகள் சம்பந்தமாக நான் செல்லும் இடங்களில் எல்லாம் அதை தேர்தல் கூட்டமாக ஆக்கிவிடுகிறேன்.
போட்டி
அதிமுக அவ்வளவு பலமான கட்சி எனில் கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டிருக்க வேண்டியது தானே. எங்களுக்கு எதற்கு 41 தொகுதிகளை அளித்தார்கள். தமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சிக்கு வர விட மாட்டோம் என்றார் விஜயகாந்த்.