பிரசாரத்தை ரத்து செய்து விட்டு ராஜ்நாத்தை சந்திக்க சென்னை வந்த விஜயகாந்த்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பிரசாரத்தை திடீரென ரத்து செய்துள்ளார். இன்று சென்னை வரும் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசுவதற்காக அவர் பிரசாரத்தை நிறுத்தியுள்ளாராம்.
இன்று பாஜக தனது தமிழக கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடவுள்ளது. இதற்காக பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் சென்னை வருகிறார்.

அதிகாரப்பூர்வமாக தொகுதிப் பங்கீடு தொடர்பா்ன விவரங்களை வெளியிடுவதற்கு முன்பு அவர் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இதில் மதிமுக, பாமக, தேமுதிக, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த சந்திப்பு நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
இதில் தயவு செய்து அனைத்துக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று பாஜக கேட்டுக் கொண்டுள்ளதாம்.
ஆனால் இந்தக் கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொள்ள மாட்டார் என்று உறுதியாகத் தெரிகிறது. இருப்பினும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாரிவேந்தர், ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தற்போது விஜயகாந்த்தும் இதில் இணைகிறார்.
இதற்காக மதுரை, தேனி, விருதுநகரில் தான் செய்யவிருந்த பிரசாரத்தை அவர் ரத்து செய்து விட்டு சென்னை விரைகிறாராம்.
ராஜ்நாத் சிங்குடன் நடக்கும் சந்திப்புக்குப் பின்னர் பாஜக கூட்டணி தொடர்பான தெளிவான, இறுதியான விவரம் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications