சட்டசபையை அதிமுக- திமுகவின் போர்க்களமாக மாத்திட்டாங்களே.... "நாக்குத் துருத்தி" விஜயகாந்த் வேதனை
சென்னை: அதிமுக மற்றும் திமுகவின் போர்க்களமாக தமிழக சட்டசபையையே மாற்றிவிட்டார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை:
தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சியை சேர்ந்த திமுகவினரை அவைக் காவலர்களை வைத்து கூண்டோடு வெளியேற்றியதையும், அதே ஒரு வார காலத்திற்கு அவர்களை சஸ்பென்ட் செய்து அறிவித்து இருப்பதும் வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறிய கதையையே நினைவு படுத்தியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தேமுதிக தினந்தோறும் மக்கள் பிரச்சனைகளையும், தொகுதி பிரச்சனைகளையும் பேச முற்பட்ட போதெல்லாம் இதுபோன்ற முறையற்ற நிகழ்வுகளையே அதிமுக அரசு அரங்கேற்றியது.
அவையில் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை முற்றிலும் செயல்பட விடாமல் தடுத்து, அரசுக்கு எதிராக யாரும் பேசி விடக்கூடாது என்ற ஒரே எண்ணத்தில் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்களின் மைக்குகளை செயல்படவிடாமல் செய்வதும், அவைக் காவலர்களை வைத்து வெளியேற்றுவதும், நீண்ட நாட்களுக்கு சஸ்பென்ட் செய்வதும் என்று சட்டமன்ற மரபுகளை கேள்விக்குறியாக்கும் அளவு செயல்பட்டனர்.

நேரடி ஒளிபரப்பு அவசியம்
நியாயத்தை கேட்ட தேமுதிகவினரின் உண்மை நிலையை மக்களிடையே கொண்டுசெல்ல விடாமல் பல்வேறு வகையிலும் தடுத்தனர். அதனால் தான் சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது அவசியம் என்று வலியுறுத்தி பல தடவை அரசிடம் கேட்டும் பலனில்லாமல் போனது. நேரடி ஒளிபரப்பு செய்ய பல கோடி ரூபாய் செலவாகும் என்று காதில் பூ சுற்றுவதை போல சாக்குப் போக்கு சொல்லி நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை.

கலாசாரத்தை மாற்றிவிட்டார்கள்...
தேமுதிக கடந்த ஐந்து ஆண்டுகளில் பட்ட கஷ்டத்தின் தொடக்கமாக திமுகவின் இன்றைய நிகழ்வு ஏற்பட்டுள்ளது. திமுக, அதிமுக இவர்கள் இருவரும் மாறி,மாறி இதுபோன்ற நிகழ்வுகளை ஏற்படுத்தி தமிழக சட்டசபையின் கலாச்சாரத்தை மாற்றிவிட்டார்கள்.

போர்க்களமாகிட்டாங்களே...
மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் இந்த சட்டசபை, மக்களின் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், இவர்கள் இரண்டு பேர்களுக்கும் இடையே நடக்கும் போர்க்களமாகவே இந்த சபையை மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்குத்தான் காமராஜர் சொன்னார் இந்த (அதிமுக, திமுக) இரண்டு கட்சிகளுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதற்கு சான்றாகவே இந்த சட்டசபை அரங்கேறி கொண்டுருக்கிறது.

புதிய ஆட்சி வரனும்...
இந்த நிலைகள் தமிழகத்தில் முற்றிலும் மாற, இந்த இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக புதிய ஆட்சி வரும் பொழுதுதான் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.












Click it and Unblock the Notifications