உள்ளாட்சி தேர்தலில் எந்த கூட்டணி? கட்சி நிர்வாகிகளிடம் போட்டு உடைத்த விஜயகாந்த்
சட்டமன்றத் தேர்தல் படுதோல்விக்குப் பிறகு, அதற்கான காரணங்களை கண்டறியும் வேலைகளில் தீவிரமாக இருக்கிறார் விஜயகாந்த்.
கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட வாரியாக கட்சி பிரநிதிகளை சந்தித்து விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் வட்ட, பகுதிக் கழக பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார் விஜயகாந்த்.
மக்கள் நலக் கூட்டணியோடு சட்டமன்றத் தேர்தலில் அணி சேர்ந்த தே.மு.தி.க, 2.5 சதவீத வாக்குகளை மட்டுமே வாங்கியது. உளுந்தூர்பேட்டை தொகுதியில் விஜயகாந்த் டெபாசிட்டையே இழந்தார்.
அடிமட்ட ஆலோசனை
மாவட்டச் செயலாளர்களைத் தவிர்த்து இந்தக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மா.செக்கள் பங்கேற்றால், அடிமட்ட நிர்வாகிகள் கருத்துச் சொல்ல பயப்படுவார்கள் என்பதால், வட்ட, பகுதி பிரதிநிதிகளுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டு கருத்து கேட்கப்படுகிறது.
பணம் வாங்கவில்லை
அவர்களிடம் கருத்து கேட்ட விஜயகாந்த், நமது ஓட்டுக்கள் எல்லாம் எங்கே போனது? தேர்தலில் நிற்பதற்காக பணம் வாங்கிவிட்டோம் என்று வரும் தகவல்கள் பொய்யானது. நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை. மக்கள் நலக் கூட்டணியோடு இணைந்ததற்குக் காரணம், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்.
தனித்து போட்டி
ஆனால், நிர்வாகிகள் அனைவரும் இப்படியொரு கூட்டணி வைத்தது தவறான முடிவு எனச் சொல்கிறீர்கள் அல்லவா. எனவே உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு நமது பலத்தைக் காட்டுவோம். நாம் இழந்த செல்வாக்கை வரும் தேர்தல்களில் மீட்டெடுப்போம். இவ்வாறு நிர்வாகிகளிடம் கருத்து கூறியுள்ளார் விஜயகாநத்.
சுற்றுப் பயணம்
மேலும், கட்சியை வளர்க்க, தொண்டர்கள் கருத்துக்களை கேட்க மாவட்ட வாரியாக விஜயகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளாராம். பீனிஸ்க் பறவை கிளம்பிடுச்சிடோய்..