ஜெ. சொன்ன 110 அறிவிப்புகள் மக்களுக்கு அவர் போட்ட 111 பட்டை நாமம்.. 'கேப்டன்' அட்டாக்!
விழுப்புரம்: சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் விடுக்கும் திட்ட அறிக்கைகள் மக்களுக்கு 111 ஆக மாறி இருக்கிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். தமிழகத்தில் மின் வெட்டே இல்லை என்கிறார் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். ஆனால் எல்லா ஊரிலும் மின்வெட்டு இருக்கிறது என்றும் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மக்களுக்காக மக்கள் பணி என்ற தலைப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் தியாகதுருகத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.25 லட்சம் செலவில் ஆரம்ப சுகாதார மையங்களுக்கு 100 கட்டில், தலையணை, மெத்தைகளும், குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு மூச்சு திணறலை கட்டுப்படுத்தும் 100 மருத்துவ உபகரணங்களும் (நெப்லைசர்), நோயால் பாதிக்கப்பட்ட ஏழைகள் 150 பேருக்கு மருத்துவ சிகிச்சை பெற நிதி உதவியையும் வழங்கினார்கள்.

பட்டை நாமம் போட்ட ஜெ
விழாவில் பேசிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ‘சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் விடுக்கும் திட்ட அறிக்கைகள் மக்களுக்கு 111 ஆக மாறி இருக்கிறது. தமிழகத்தில் மின் வெட்டே இல்லை என்கிறார் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். ஆனால் எல்லா ஊரிலும் மின்வெட்டு இருக்கிறது. தமிழகத்தில் மின் வெட்டு இல்லை என்பதை முதல்வர் நிரூபிக்க தயாரா?.

மின் உற்பத்தியில்லை
கடந்த 2013ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் பேசுகையில், ‘5 ஆண்டுகளில் 15 ஆயிரம் மெகாவாட் அனல் மின்சாரமும், காற்றாலைகள் மூலம் 5 ஆயிரம் மெகாவாட், சூரிய சக்தி மூலம் 3 ஆயிரம் மெகாவாட் என மொத்தம் 23 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும்' என்றார். ஆனால் ஒரு யூனிட் மின் சாரம் கூட உற்பத்தி செய்யவில்லை.

அம்மா கைபேசி
தற்போது ‘அம்மா கைபேசி' கொடுப்பதாக அறிவித்துள்ளனர். இதனை மக்கள் வரிப் பணத்தில் இருந்துதான் கொடுக்கிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். தியாகதுருகம் ஒன்றியம் வடதொரசலூர் ஊராட்சிக் குட்பட்ட கோவிந்தசாமிபுரம் மக்கள் 350 நபர்களுக்கு பட்டா வழங்குமாறு பலமுறை அதிகாரிகளிடம் கேட்டும் இதுவரை வழங்கப்படவில்லை.

நாளை நமது அரசு
நாளைய தமிழக அரசு, நமது அரசாக இருக்க வேண்டும். நமது அரசாக்க வேண்டியது மக்களாகிய உங்கள் பொறுப்பு. நாங்கள் செய்து வரும் ‘மக்களுக்காக, மக்கள் பணி' என்றும் தொடரும் என்றார் விஜயகாந்த்.

கேப்டன் உள்ளம் சுத்தம்
முன்னதாக விழாவில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தமிழ்நாட்டின் தலைவிதியை மாற்றுவோம் என்று திரண்டிருக்கும் இந்த கூட்டத்தின் மூலம் நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். நமது கேப்டன் உண்மையின் சொரூபமாக இருப்பார். அவரது உள்ளம் சுத்தமானது என்பதால் இந்த அளவுக்கு கட்சியை வளர்த்து வருகிறார். அவரை ஏமாற்றியவர்கள் அதன் பலனை அனுபவிப்பார்கள். தற்போது அனுபவித்தும் வருகிறார்கள்.

மருத்துவ வசதி
இந்த மாவட்டம் 50 லட்சத்துக்கு மேற்பட்ட ஏழை-எளிய விவசாயிகள் நிறைந்த மாவட்டமாகும். ஆனால் அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி இங்கு இல்லை, அதனால் தான் நாங்கள் மருத்துவ உபகரணங்கள் வழங்குகிறோம்.

மேம்பால பணிகள்
ரிஷிவந்தியம் தொகுதியில் ரூ.8 கோடி மதிப்பில் சாலை வசதிகள், மேம்பாலம் அமைத்தல் என மொத்தம் 450 பணிகளும், திருக்கோவிலூர் தொகுதியில் ரூ.200 கோடியில் 511 பணிகளும் செய்து தரப்பட்டுள்ளன. மக்கள் பணத்தில் ஒரு ரூபாய் கூட லஞ்சம் ஊழலில்லாமல் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மணலூர்பேட்டையில் மேம்பாலம் அமைக்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அப்பணி தொடங்குவதற்கான முயற்சிகளை கேப்டன் மேற்கொண்டுவருகிறார்.

நேர்மையான அதிகாரிகள்
தற்கொலை செய்து கொண்ட துணை போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுபிரியாவுக்கு நீதி கிடைக்கவில்லை, நேர்மையான அதிகாரிகள் நிம்மதியாக வாழமுடிவதில்லை என்ற நிலையுள்ளது. விஷ்ணுபிரியா கொலை வழக்கில் தேடப்படும் யுவராஜ் வாட்ஸ் அப்பில் தனது உரையாடலை வெளிட்டு வருகிறார். ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையாக பேசப்படுகிற காவல் துறை என்ன செய்கிறது. விஷ்ணுபிரியா மரணத்திற்கு முதல்வர் ஜெயலலிதா அனுதாபம் தெரிவிக்கவில்லை. என்ன காரணம் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் பிரேமலதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications