காலு அப்படியே தூக்கும்.. அப்புறம் இறங்கும்.. யோகா குறித்த 'கேப்டன்' விஜயகாந்த்தின் விளக்கம்!
சென்னை: சர்வதேச யோகா தினத்தையொட்டி நேற்று தனது கட்சிக்காரர்களுடன் சேர்ந்து யோகாசனம் செய்த விஜயகாந்த் யோகா என்றால் என்ன, அதன் பலன் என்ன என்பது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கினார்.
மனைவி பிரேமலதா, மச்சான் சுதீஷ் மற்றும் கட்சியினருடன் வெள்ளைச் சட்டை, வெள்ளை பேண்ட் போட்டு யோகாசனம் செய்தார் விஜயகாந்த்.
விதம் விதான ஆசனங்களை உட்கார்ந்தபடியே போட்டுக் கலக்கினார் விஜயகாந்த்.
யோகாசனம் என்றால் என்ன, நாங்கள் ஏன் அதைச் செய்கிறோம் என்பது குறித்தும் அவர் செய்தியாளர்களிடம் (செலக்ட் செய்து உள்ளே அனுமதிக்கப்பட்ட செய்தியாளர்கள்) அவர் விளக்கியபோது அவருக்குப் பின்னால் உட்கார்ந்திருந்த தொண்டர்கள் சிரித்து ரசித்தபடி கேட்டனர். அருகில் அமர்ந்திருந்த விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதாவும் கூட யோகாசனம் குறித்து விஜயகாந்த் கூறியதைக் கேட்டு பூரிப்புடன் அமர்ந்திருந்தார்.
சரி இனி விஜயகாந்த்தின் பேச்சு...
எப்படின்னாலும் பண்ணலாம்
அதாவது யோகாங்கிறது அமைதி. அதை எப்படி வேணும்னாலும் பண்ணலாம்.
இந்த பத்மாசனம் இருக்கே
இந்த பத்மாசனம் இருக்கே, அதை இப்படி பண்ணனும். இப்படிப் பண்ணப் பண்ண,. மூச்சு விட விட இப்டியே இறங்கிட்டே இருக்கும் (கையை இறக்கிக் காட்டுகிறார்).
காலு தூக்கும்
அதேபோல காலு அப்படியே தூக்கும். எல்லோருக்குமே தூக்கும். பிறகு அப்படியே இறங்கும். இதை நீங்க செஞ்சு பாக்கனும்.
குனிஞ்சு குனிஞ்சு நிமிரனும்
எனக்கு காலு உக்காரும்போது சமமாத்தான் இருக்கும். குனி்ஞ்சு குனி்ஞ்சு நிமிரனும், என்னமோ செய்வாங்க. என் உடம்பு இப்படி இருக்குன்னா அதுக்குக் காரணம் யோகாசனம்தான்.
ஐ.நா.வே ஒத்துக்கிட்டாங்க
அதேமாதிரி பிரணாயனம் செய்யனும். மூச்சுப் பயிற்சி. யோகா தினம் என்பது ஐ.நாவே ஒத்துக்கிட்டாங்க. அதான் பெரிய விஷயம். அதைத்தான் நாம செய்றோம்.
சுபிட்சமா இருக்கனும்
எனது கட்சிக்காரர்கள் சுபிட்சமா இருக்கனும். அதனால யோகா செய்றோம். வருஷா வருஷம் செய்வோம் என்றார் விஜயகாந்த்.
எந்த விரலை வைப்பது
நேற்று யோகாசனம் செய்யும்போது மூக்கின் மீது விரலை வைக்கும் போது எந்த விரலை எப்படி வைக்க வேண்டும் என்பதை நன்றாக பார்த்து விட்டு பிறகு மெதுவாக வைத்தார் விஜயகாந்த். அப்படியும் சரியாக வைக்கவில்லை. பிறகு விரலை எடுத்து விட்டு மறுபடியும் விரலை பார்த்து ரைட் இப்பச் சரி என்று நினைத்தபடி மீண்டும் விரலை வைத்தார்
தொடையில் கை வைத்தபோது
அப்புறம் தியான நிலை பொசிஷனின்போது விரலை எப்படி மடக்கி தொடையில் வைக்க வேண்டும் என்று அவருக்குத் தெரியவில்லை. அதை பிரேமலதா சொல்லிக் காட்டியதும் அதேபோலச் செய்தார் விஜயகாந்த்.
தைலம் தடவுவது போல
தலைவலிக்கும்போது இரண்டு பக்க நெற்றியிலும் தைலம் தடவுவார்களே. அதேபோல ஏதோ செய்தார் விஜயகாந்த். அது என்ன யோகா நிலை என்று தெரியவில்லை.
குசுகுசுவென பேச்சு
விஜயகாந்துக்குப் பின்னால் அமர்ந்திருந்த பலர் சரியான முறையில் உட்காராமல் தவளை போல ஜம்ப்பிங்கிலேயே இருந்ததையும், சிரித்தபடியும், குசுகுசுவென பேசியபடியும் இருந்த காட்சியையைும் காண முடிந்தது.
மொத்தத்தில் தேமுதிகவின் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம் அமோகமாக நடந்து முடிந்தது.