மருத்துவ கல்லூரி விவகாரம்.. அதிமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி உண்ணாவிரதம் திடீர் ஒத்திவைப்பு
சென்னை: மருத்துவ கல்லூரி விவகாரத்தை முன்வைத்து, அதிமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி இருக்கப்போவதாக அறிவித்த உண்ணாவிரத போராட்டம் தள்ளிப்போடப்பட்டுள்ளது.
கரூர் அடுத்த, வாங்கல் கிராமத்தின், குப்புச்சிபாளையத்தில் மருத்துவக்கல்லூரி வரவிடாமல் தடுப்பதாக லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், இருவரின் செயலை கண்டித்து கரூரில் மே 5 ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்க உள்ளதாகவும், அதற்கு அனுமதி அளிக்கக் கோரியும், கரூர் டிஎஸ்பி.யிடம் மனு அளித்தும் அதை பரிசீலிக்காததால் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார் செந்தில் பாலாஜி.
ஹைகோர்ட் உத்தரவு
ஹைகோர்ட் புதிய மனு ஒன்றை காவல்துறையிடம் வழங்க செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்டது. அதை பரிசீலிக்க காவல்துறைக்கு அறிவுறுத்தியது.
இதையடுத்து புதிய மனுவை செந்தில் பாலாஜி, போலீசாரிடம் வழங்கினார். இந்த மனுவை போலீசார் பரிசீலித்து வந்த நிலையில், இன்று அனுமதி வழங்கி போலீசார் பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.
போட்டி உண்ணாவிரதம்
இந்த நிலையில், விஜயபாஸ்கர் ஆதரவாளர் நெடுஞ்செழியன் என்பவர், அதே நாளில் கரூரில் உண்ணாவிரதம் இருக்க போலீசாரிடம் கோரிக்கை மனு வழங்கியிருந்தார். அவரது கோரிக்கையையும் ஏற்று அனுமதி வழங்கியுள்ளது கரூர் காவல்துறை.
இரு கோஷ்டி
வட்டாட்சியர் அலுவலகத்தின் எதிரே உண்ணாவிரதம் இருக்க செந்தில் பாலாஜி அனுமதி கோரியிருந்த நிலையில், அதை மறுத்துள்ள காவல்துறை, வாங்கல் பகுதியில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கியுள்ளது. நெடுஞ்செழியனுக்கு, கரூர் நகரிலுள்ள காந்தி கிராமம் பகுதியில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சட்டம்-ஒழுங்கு
இருப்பினும், அதிமுகவின் இரு கோஷ்டிகள், ஒரே நாளில் பக்கத்து ஏரியாக்களில் உண்ணாவிரதம் இருக்க உள்ளதால் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், வட்டாட்சியர் அலுவலகத்தில்தான் உண்ணாவிரதம் இருப்பேன் என்றும், இதற்கு நீதிமன்ற அனுமதியை பெற திட்டமிட்டுள்ளதாகவும், அதுவரை போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாகவும், இன்று மாலை நிருபர்களிடம் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.