மன்னிப்பு கேட்க கோரி விஜயேந்திரரின் உருவபொம்மையை எரித்த தஞ்சை மாணவர்கள்
தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விவகாரத்தில் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திரரின் உருவ பொம்மையை எரித்து தஞ்சையில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Recommended Video
தஞ்சை: தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்காமல் அவமதித்த விவகாரத்தில் காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரரின் உருவபொம்மையை தஞ்சையில் மாணவர்கள் எரித்து போராட்டம் நடத்தினர்.
சென்னையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவின் தந்தை ஹரிஹரன் எழுதிய தமிழ்- சம்ஸ்கிருதம் அகராதி நூல் வெளியிட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சி தொடங்கியபோது தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டது.
இதற்கு ஆளுநர் உள்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். ஆனால் விஜயேந்திரரோ எழுந்து நிற்காமல் உட்கார்ந்து கொண்டே இருந்தார். இது சர்ச்சையை கிளப்பியது. மேலும் தேசிய கீதத்துக்கு மட்டும் அவர் எழுந்து நின்றது மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதை கண்டித்து தமிழகத்தில் தமிழ் அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி தஞ்சையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விஜயேந்திரரின் உருவபொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.