ஜெயலலிதா வந்து ஓட்டுப் போட வேண்டும்.. சொல்கிறார் விஷால்
சேலம்: நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்கப் போவதாக விஷால் கூறியுள்ளார். நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் என்ற வகையில் அவரும் தேர்தலில் பங்கேற்று ஓட்டுப் போட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சேலம் மாவட்ட நாடக நடிகர்களின் கலை குடும்பத்தின் சந்திப்பு விழா சேலத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஷால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது விஷால் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

சேலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நாடக நடிகர்களின் கலை குடும்ப சந்திப்பு விழாவில் கலந்து கொள்ளக்கூடாது என்று பல்வேறு இன்னல்கள் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அதையும் மீறி நாங்கள் இந்த விழாவில் கலந்துகொண்டிருக்கிறோம். நாமக்கல், திருச்சியில் நடைபெற உள்ள விழாவிலும் கலந்து கொள்ளக்கூடாது என்று மிரட்டல் வருகிறது. அங்குள்ள சங்க நிர்வாகிகள் தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மற்ற உறுப்பினர்கள் நிச்சயம் எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் நம்பிக்கை உள்ளது. எந்த மிரட்டல் வந்தாலும் திட்டமிட்டபடி நாமக்கல், திருச்சியிலும் நாடக நடிகர்களை சந்திப்போம்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பல்வேறு ஊழல், முறைகேடுகள் நடக்கிறது என்று முதல் முதலில் சங்க அலுவலகத்திற்கு சென்று கேள்வி கேட்டேன். ஆனால் அது தொடர்பாக சங்க நிர்வாகிகள், நான் கேட்ட கேள்விக்கு இதுவரை பதில் அளிக்கவில்லை. நடிகர் சங்க நிர்வாகிகளை நான் கேள்வி கேட்டதால் எனக்கு பல்வேறு மிரட்டல்கள் வந்தது. முதலில் யோசித்தேன். எனது பெற்றோரும் இது தேவையா? என்று கேட்டார்கள். பிறகு தான் நடிகர் சங்கத்தில் ஏற்கனவே நிர்வாகிகளாக இருந்தவர்கள் எனக்கு ஆதரவு தெரிவித்தனர்.
நடிகர்களுக்காக ஒதுக்கப்பட்ட சொத்துக்களை மீட்டு அவர்களது உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று எனது பெற்றோரும் எனக்கு ஊக்கம் அளித்தனர். அதன்படி தான் நடிகர்கள் நாசர், கருணாஸ், கார்த்தி, பொன்வண்ணன் உள்ளிட்ட பல நடிகர்களும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பல்வேறு ஊழல், முறைகேடுகள் நடந்திருப்பது உண்மை. அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. எங்களது கேள்விக்கு பதில் கிடைக்கும் வரை ஓயமாட்டோம். சங்க உறுப்பினர் என்ற முறையில் கேள்விக்கு கேட்பதற்கு உரிமை உள்ளது. நடிகர் சங்க நிர்வாகிகளின் வீட்டு வாசலில் நின்று கேள்வி கேட்பேன். அதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.
நடிகர் சங்க தேர்தலை வெளிப்படையாக நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்திற்கு சென்றுள்ளோம். விரைவில் தேர்தல் குறித்த அறிவிப்பு வர உள்ளது. எங்களது அணியில் உள்ளவர்கள் அரசியல் சாயம் இல்லாதவர்கள். தற்போது எதையும் சந்திக்க தயாராக உள்ளோம். பதவிக்கு வந்தால் தான் நல்லது நடக்கும் என்றால் நாங்கள் நடிகர் சங்க தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம். ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்றால் கூட மீண்டும் தேர்தலில் போட்டியிடுவோம்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடக்கிற ஊழல், முறைகேடுகள் தொடர்பாகவும், நடிகர் சங்க தேர்தலை வெளிப்படையாக நடத்துவது தொடர்பாகவும் முதல்வர் ஜெயலலிதாவை ஒட்டுமொத்த நடிகர்கள் திரண்டு விரைவில் சந்தித்து முறையிட உள்ளோம். சங்கத்தின் மூத்த உறுப்பினர் என்ற முறையில் முதல்வரும் தேர்தலில் ஓட்டுபோட வர வேண்டும் என்று அவரிடம் நாங்கள் வலியுறுத்துவோம்.
சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு வீடுகள் கட்டி தருவது தொடர்பாக நடிகர் ரித்தீஷ் ரூ.10 லட்சம் தருவதாக அறிவித்தார். அதன்படி அவரும் நடிகர் சங்க நிர்வாகிகளிடம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் அவர் பணம் தரவில்லை என்று சங்க நிர்வாகிகள் மூலம் உறுப்பினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. நடிகர் ரித்திஷ் கொடுத்த ரூ.10 லட்சம் எங்கே?. இதுபோல் பல்வேறு ஊழல், முறைகேடுகள் நடந்துள்ளது. இதை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். எனவே, நடிகர் சங்க தேர்தலில் உறுப்பினர்களாக உள்ள அனைவரும் நல்லது நடக்க வேண்டும் என்ற அடிப்படையில் வாக்களிக்க வேண்டும் என்று கூறினார் விஷால்.












Click it and Unblock the Notifications