சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் விவேக்கின் ஜாஸ் சினிமாஸ் ஊழியர்கள் 3 பேர் ஆஜர்
சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் விவேக்கின் ஜாஸ் சினிமாஸ் ஊழியர்கள் 3 பேர் ஆஜராகியுள்ளனர்.
சென்னை: வருமான வரித்துறை அலுவலகத்தில் இளவரசி மகன் விவேக்கின் ஜாஸ் சினிமாஸ் ஊழியர்கள் 3 பேர் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.
வருமான வரித்துறையின் கிடுக்குப்பிடியில் சிக்கியிருக்கிறார் விவேக். சசிகலாவின் சாம்ராஜ்யத்தின் பெரும்பகுதியை நிர்வகித்து வரும் 27 வயது விவேக், 2 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ1,000 கோடி மதிப்பில் ஜாஸ் சினிமாஸை வாங்கியபோதே சர்ச்சை வெடித்தது.
தற்போது வருமான வரித்துறை அதிகாரிகளும் ஜாஸ் சினிமாஸை விவேக் வாங்குவதற்கு எங்கிருந்து பணம் வந்தது என குடைந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் திடீரென சென்னையில் விவேக் செய்தியாளர்களிடம் சந்தித்து, வருமான வரித்துறை கடமையை செய்கிறது; நான் கேள்விகளுக்கு பதில் தந்து கொண்டிருக்கிறேன் என்று மட்டும் கூறினார்.
இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? எப்படி வருவாய் கிடைத்தது? என்பது தொடர்பான செய்தியாளர்கள் கேள்விகளுக்கு விவேக் பதில் தரவில்லை. இதனிடையே விவேக்கின் ஜாஸ் சினிமாஸ் ஊழியர்கள் 3 பேர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வந்துள்ளனர்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஜாஸ் சினிமாஸ் ஊழியர்கள் வங்கிக் கணக்குகள் மூலமாக பெருமளவு பணம் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் விவேக்கின் வர்த்தக நடவடிக்கைகள் குறித்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.