போக்கு காட்டும் பருவமழை.. குறையும் பாபநாசம் அணையின் நீர்மட்டம்!
பருவமழை முறையாக பெய்யாததால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் கணிசமாக குறையத் தொடங்கியுள்ளது,
நெல்லை: பருவமழை முறையாக பெய்யாததால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் கணிசமாக குறையத் தொடங்கியுள்ளது. இதனால் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் உள்ளன. இந்த இரண்டு அணைகள் மூலமே நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர், விவசாய தேவைகள் பூ்ர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பிசான நெல் சாகுபடியும், தென் மேற்கு பருவமழை காலத்தில் கார் பருவ சாகுபடியும நடக்கும். கடந்தாண்டு வடகிழக்கு பருமழை பொய்ததால் பிசான பருவ நெல் சாகுபடி கைவிடப்பட்டது.
அதே நேரத்தில் கடும் குடிநீர் தட்டுபாடும் உருவானது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளை அடைத்தும், திறந்தும் பிரச்சனை தற்காலிகமாக சமாளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணைப் பகுதியில் மழை இல்லாமல் வெயில் அடித்து வருகிறது.
தற்போது பாபநாசம் அணையின் நீர்மட்டம் 33 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 22.15 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 32.54 அடியாக உள்ளது.
அணைப்பகுதியில் மழை இல்லை. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மட்டுமே பருவமழை நீடிக்கும். இந்த மாதங்களில் பெய்யும் பருவமழையை வைத்துதான் அக்டோபர் மாதம் வரை குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். இதனால் அதிகாரிகள் செய்வதறியாமல் திகைத்துள்ளனர்.