என்னது.. 12 ரூபாய்க்கு 360 ரூபாய் அபராதமா? குடிநீர் வரி உயர்த்திய மாநகராட்சி.. ஈரோடு மக்கள் ஷாக்
தண்ணீர் வரி திடீரென உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஈரோடு: தண்ணீர் வரியினை திடீரென ஈரோடு மாநகராட்சி உயர்த்திவிட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் சுமார் 5 லட்சம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மாநகராட்சி பகுதிகளுக்கு காவேரி ஆற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதிலும் வாரம் ஒருமுறை தண்ணீர் விநியோகம், மாசடைந்த தண்ணீர் என பல்வேறு பிரச்சனைகள் உள்ளன.
மாநகராட்சி முதல் மூன்று மண்டலங்களில் தண்ணீர் வரியாக 40 ரூபாயும் நான்காவது மண்டலத்தில் 60 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வந்தன. இதனை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாற்றி அமைத்து அனைத்து மண்டலங்களுக்கும் 62 ரூபாய் என ஒரே சீராக வரி விதிக்கப்பட்டது. ஆனால் இது குறித்து மாநகராட்சியின் சார்பில் முறையான அறிவிப்பு வெளியிடவில்லை என்பது பொதுமக்களின் புகாராகும்.
பெரும்பாலானோர் ஆண்டு தொடக்கத்திலேயே கட்டணம் செலுத்தியுள்ள நிலையில் அவர்களுக்கு கட்டண உயர்வு தெரியவில்லை. தற்போது நடப்பாண்டிற்கான தண்ணீர் கட்டணத்தை செலுத்த சென்றபோது உங்களுக்கு கட்டண பாக்கி உள்ளது என வரி வசூலிப்பவர் சொன்னது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
குறிப்பாக நான்காவது மண்டலத்தில் 60 ரூபாயாக இருந்த கட்டணத்தில் 2 ரூபாய் உயர்ந்துள்ளது. மாதம் 2 ரூபாய் வீதம் 6 மாதத்திற்கு 12 ரூபாய்க்கு 360 ரூபாய் அபராதம் விதித்துள்ளது பொதுமக்களை கொதிப்படைய செய்துள்ளது. விதிக்கப்பட்ட அபராதத்தை உடனடியாக திரும்ப்பெறாவிட்டால் மக்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்த ஈரோடு வரி செலுத்துவோர் சங்கம் திட்டமிட்டுள்ளது.