ஈஷாவில் எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள்... பெற்றோர்கள் சொல்வது பொய்: லதா, கீதா பேட்டி
கோவை: ஈஷாவில் எங்களின் விருப்பத்தின் பேரிலேயே இருக்கிறோம்... எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள் என்று லதா, கீதா சகோதரிகள் கூறியுள்ளனர். ஊடகங்கள் நன்றாக விசாரித்து பொறுப்புடன் எழுதுங்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈஷா யோகா மையத்தில் தங்களது இரண்டு மகள்களை மூளைச்சலவை செய்து அடைத்து வைத்திருப்பதாகவும், அவர்களை மீட்டுத் தரும்படியும் காமராஜ், சத்யஜோதி தம்பதியினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மாவட்ட தலைமை நீதிபதி தலைமையிலான அதிகாரிகள் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி மாவட்ட நீதிபதி விசாரணை மேற்கொண்டார்.
இந்த விசாரணை முடிந்ததும், கோவை ஈஷா யோகா மையத்தில் சந்நியாசம் பெற்று தங்கியுள்ள லதா, கீதா மற்றும் ரமேஷ் பாலகுரு ஆகியோர், மூடப்பட்ட அறையில் நீதிபதியின் கேள்விகளுக்கு பதில் அளித்து இருப்பதாகவும், ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் , அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினர். செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் அவர்கள் பதில் அளித்தனர்.
எங்கள் விருப்பம்
எங்கள் விருப்பத்தின் பேரிலேயே நாங்கள் இங்கு தங்கி இருக்கிறோம். நாங்கள் விரும்பிய வாழ்க்கையை வாழ்கிறோம். கடந்த ஜூலை மாதம் 19-ந் தேதி ஈஷா யோகா மையத்தில் எங்கள் பெற்றோர் எங்களுடன் தங்கியிருந்தனர். ஆனால் அதன்பிறகு அவர் களை யாரோ தூண்டி விட்டு எங்கள் மீது புகார் கூறியுள்ளனர்.
எங்களை கட்டாயப்படுத்தவில்லை
நாங்கள் எங்கள் விருப்பத்தின் பேரில் தான் இங்கு தங்கியுள்ளோம். யாரும் எங்களை கட்டாயப்படுத்தவில்லை. எங்களிடம் நடந்த விசாரணையில் இதை தெளிவுபடுத்தி இருக்கிறோம். மூடிய அறைக்குள் கூறியதை இங்கே தெரிவிக்க முடியாது.
தவறான தகவல்
எங்களது பெற்றோர் ஏன் இவ்வாறு பேசுகிறார்கள் என்று தெரியவில்லை என்றனர். இப்போது துளி கூட பாசமில்லாமல் பெற்ற மகள்கள் என்றும் கூட பாராமல் ஊடகங்களில் களங்கத்தை சுமத்துகின்றனர். அவங்கள் கூறுவது முற்றிலும் தவறான தகவல்.
பெற்றோர்கள் கூறுவது பொய்
எங்களின் உடல்நிலையைப் பற்றி எங்களுக்குத் தெரியும். பிரம்மச்சரியம் கேட்கும் பெண்களின் கர்ப்பப் பை எடுக்கின்றனர் என்றும், பீரியட்ஸ் நேரங்களில் கடினமான வேலை செய்யச் சொல்கின்றனர் என்று பெற்றோர்கள் கூறுவது பொய் என்றும் லதா கூறினார்.
உண்மையை எழுதுங்கள்
எங்களின் பெற்றோர்களுக்கு இப்போது எங்கள் மீது பாசம் கிடையாது. பெற்றோர்கள் யாருடைய தூண்டுதலின் பேரில்தான் இப்படி குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ஊடகங்களும் உண்மையை விசாரணை செய்து பொறுப்புடன் எழுத வேண்டும் என்றும் லதா, கீதா சகோதரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.