கடந்த காலங்களை மறந்து இணைந்துள்ளோம்.. ஓபிஎஸ் சொன்னவுடன்.. டக்குனு பார்த்த டிடிவி தினகரன்
சென்னை: கடந்த காலங்களை மறந்து இணைந்துள்ளோம் என்று கூறிய ஓபிஎஸ், அதிமுகவை காப்பாற்ற இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம் என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்றைய தினம் டிடிவி தினகரனை சந்தித்தார். அப்போது முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனும் உடன் சென்றுள்ளார்.
அடையாறில் உள்ள இல்லத்திற்குச் சென்று டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்தார். இருவரையும் டிடிவி தினகரன் வாசல் வரை சென்று வரவேற்றார். அதன் பிறகு மூவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

ஓபிஎஸ்: அப்போது பேசிய ஓ பன்னீர்செல்வம், " எப்போது சசிகலா மற்றும் டிடிவி தினகரனை சந்திக்க உள்ளீர்கள் என்றே இதுவரை பலரும் என்னிடம் கேட்டார்கள். இந்தச் சூழலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்துள்ளேன். சசிகலாவைச் சந்திப்பது குறித்தும் கேட்டிருந்தோம். அவர் வெளியூரில் இருப்பதால் வந்தவுடன் சந்திக்கலாம் என்று கூறியுள்ளார். வந்தவுடன் நிச்சயம் சந்திப்போம்" என்றார்.
அடுத்த மாநாடு ஒன்றாக இணைந்து நடத்துவீர்களா என்ற கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காமல், "உங்கள் சிந்தனை, செயல், நல்ல நோக்கம் நிறைவேற வாழ்த்துகள்" என்று கூறி முடித்துக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "நான் ஏற்கனவே பல முறை சொல்லிவிட்டேன். எம்ஜிஆர், ஜெயலலிதா எதற்காக இந்த கட்சியை உருவாக்கினார்களோ.. அதற்கு அனைத்து தொண்டர்களும் ஒன்றாக இணைய வேண்டும். அதுதான் தமிழக மக்களின் விருப்பமாகவும் உள்ளது. அந்த நோக்கத்தின் முதற்கட்டமாகவே இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. இனி ஒவ்வொரு சந்திப்போம் அதை நோக்கியே இருக்கும்
ஜெயலலிதா காலத்தில் அதிமுக எப்படி இருந்ததோ அதேபோன்ற அதிமுகவை நிச்சயம் உருவாக்குவோம். தொண்டர்களின் விருப்பமும் இதுதான். திருச்சி மாநாட்டிலும் தொண்டர்கள் இதையே தான் கூறினார்கள்" என்றார்.
கடந்த காலங்களை மறந்து: டிடிவி அழுத்தம் காரணமாகவே முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாக ஓபிஎஸ் கடந்த காலத்தில் குறிப்பிட்டது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பவே அதற்குப் பதிலளித்த ஓபிஎஸ்,"கடந்த காலங்களை இணைந்தே நாங்கள் இப்போது இணைந்துள்ளோம் எடப்பாடி சுயநலமாகச் செயல்பட்டு வருகிறார். எம்ஜிஆர். ஜெயலலிதா காட்டிய வழியில் செயல்பட உள்ளோம். அதற்கான முதல் படிதான் இது.

ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை தொடங்கி எல்லாம் கிடைத்தும் 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளனர். கட்சியை இணைப்பதே அதிமுகவை மீட்க ஒரே வழி.. அடுத்த மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் அதற்கான இடம் தேர்வு செய்யப்படுவது இறுதி செய்யப்படும்" என்றார்.
சபரீசன்: தொடர்ந்து சபரீசன் உடனான சந்திப்பு குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஓபிஎஸ், "நான் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியைச் சந்திக்கச் சென்றேன். அப்போது எதிர்பாராத விதமாக சபரீசனை சந்தித்தேன். இது மரியாதை நிமிர்த்தமானது மட்டுமே. அரசியல் ரீதியானது இல்லை. அங்கே மைதானத்தில் 40 ஆயிரம் பேர் இருந்தனர். அங்கே எப்படி அரசியல் பேச முடியும்" என்றும் அவர் தெரிவித்தார்.
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது அவர் டிடிவி தினகரனை சந்தித்துள்ளார். அடுத்து அவர் விரைவில் சசிகலாவையும் சந்திக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications