ஐடி ரெய்டு வரப்போவது 2 நாள் முன்பே எங்களுக்கு தெரியும்.. தங்க தமிழ்ச்செல்வன் வெளியிட்ட திடுக் தகவல்
சென்னை: வருமான வரித்துறை ரெய்டு நடத்தவிருந்த தகவல் முன்கூட்டியே தங்களுக்கு தெரியும் என்று தினகரன் ஆதரவு முன்னாள் எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன் டிவி விவாத நிகழ்ச்சியில் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தங்க தமிழ்ச்செல்வன் கூறுகையில், ஐடி அதிகாரிகல் ரெட்சன் அம்பிகாவதி நிறுவனமான, பாஸ்ட் டிராக் கால் டாக்சிகளை வாடகைக்கு அமர்த்தியுள்ளனர். மொத்தம் 350 வாகனங்கள் தரப்பட்டுள்ளன. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பதவியில் உள்ள ஒருவரின் மகள் பார்ட்னராக உள்ள ஒரு ரெஸ்டாரண்டில்தான் ரெய்டு பற்றி 2 நாட்கள் முன்பு ஆலோசனை நடந்துள்ளது.
அந்த ரெஸ்டாரண்ட் எஸ்ஐஇடி கல்லூரி அருகேயுள்ளது. இவ்வளவு தகவல்களும் எங்களுக்கு முன்கூட்டியே தெரியும். எனவே இது ஒரு திட்டமிட்ட செயல் என்றார்.
துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவின் மகளுக்கு சொந்தமான ரெஸ்டாரண்டில் வைத்து ஐடி ரெய்டுக்கு ஆலோசிக்கப்பட்டதாக தங்க தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவரது பெயரை தெரிவிக்காமல் தங்க தமிழ்ச்செல்வன் கருத்து கூறினார்.