நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு: ஸ்டாலின் அறிவிப்பு
நாமக்கல்: அதிமுகவின் 4 ஆண்டு சாதனை தகவல் பலகையை மாவட்ட ஆட்சித்தலைவர் தட்சிணாமூர்த்தி பெயரிலேயே வைக்கப்பட்டுள்ளதற்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்திற்காக நாமக்கல் மாவட்டம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டார். அப்போது, உரையாற்றிய அவர், அதிமுகவின் 4 ஆண்டு சாதனை தகவல் பலகை நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் பெயரிலே வைக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்தார்.
இது குறித்து, தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்படுவதுடன், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் தட்சணாமூர்த்தி மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றார்.

ஆட்சி மாற்றம்
மக்களிடம் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற உணர்வு உள்ளதை அறிய முடிகிறது. வரும் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில், நீங்கள் தெரிவித்த கோரிக்கையில் எதை எல்லாம் சேர்க்க வேண்டுமோ, அதை கட்டாயமாக சேர்ப்போம். கோழிப்பண்ணையாளர்களின் முக்கிய பிரச்னைகள் அதில் இடம் பெறும். கண்டிப்பாக சிங்கிள் டெண்டர் முறை ரத்து செய்யப்படும்.

வெளிப்படையான ஆட்சி
சொன்னால் கரப்சன், கலெக்சன், கமிஷன் இல்லாத ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்துவோம். நாமக்கல்லுக்கு கோழி பண்ணை தொழிலை போன்று லாரி தொழிலும் முக்கியம். இந்த தொழிலை நம்பி பல லட்சம் பேர் இருப்பதையும் உணர்ந்தே இருக்கிறோம். லாரிகளுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையில் மாற்றத்தை வற்புறுத்தியுள்ளீர்கள். சுங்க கட்டணம் செலுத்துவதை நிச்சயம் முறைப்படுத்துவோம். லாரி தொழில் துறையினரின் பல்வேறு கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதியிலும் இடம் பெற செய்து ஆட்சிக்கு வந்தவுடன் அதை தீர்த்து உங்கள் கண்ணீரை துடைப்போம்.

லஞ்சத்தை ஒழிப்போம்
அரசு அலுவலகங்களில் லஞ்சம் தாண்டவமாடுகிறது. இதை தடுக்க லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவரப்படும். தமிழகத்தில் 85 லட்சம் பேர் வேலை வாய்ப்பு கிடைக்காமல் உள்ளனர். இதில் 50 சதவீதம் பெண்கள். கடந்த நான்கரை ஆண்டில் ஒரு தொழிற்சாலை கூட தொடங்கவில்லை. தவறுகள் இல்லாத ஒரு ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்துவதே எங்கள் பிரதான நோக்கமாக இருக்கும்.

மாற்றத்தை தரும் கட்சி
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முழுமையாக வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வேலைவாய்ப்புகள் உருவாக்கி தரப்படும். விவசாயம், குடிநீர் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். நாலரை ஆண்டுகளாக நடக்காதவற்றை, திமுக ஆட்சிக்கு வந்ததும் செய்யும்போது முழு மாற்றம் ஏற்பட்டு விடும். மற்ற அரசியல்கட்சியினர் கூறுகிறார்கள். ஆனால் மாற்றத்தை தர இயலாது. காரணம் அவர்களால் ஆட்சிக்கு வர இயலாது. திமுக மட்டுமே ஆட்சிக்கு வரும். மாற்றத்தை தரும் என்றார்.

நெசவு தொழிலாளர்கள்
பள்ளிபாளையத்தில் நடந்த விசைத்தறி, சாயப்பட்டறை, நூற்பாலை தொழிலாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் மின்வெட்டு பிரச்னை தீரவில்லை. தொழில்கள் நசிந்துள்ளன. பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் நெசவாளர்கள் கிட்னியை வெளிநாடுகளில் விற்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் விடிவு தேடி தரும் வகையில் திமுக ஆட்சி அமையும். நெசவு தொழிலை பாதுகாப்பதற்கும், முதலீ்ட்டு மானிய கடன் உயர்த்தவும் திமுக நடவடிக்கை எடுக்கும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விடியல் மீட்பு பயணத்தில் 50% நிறைவு
கடந்த மாதம் 20ம் தேதி நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தின் முதற்கட்டத்தை கன்னியாகுமரியில் துவங்கினேன். தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் 74 சட்டமன்ற தொகுதிகளில் பயணம் செய்து முடித்துள்ளேன். 2ம் கட்ட பயணத்தை கடந்த 7ம் தேதி நீலகிரியில் துவங்கினேன். கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், இன்று நாமக்கல் என இதுவரை மொத்தம் 113 சட்டமன்ற தொகுதிகளுக்கு வந்துள்ளேன். 234 தொகுதிகளில் பாதியை தாண்டியுள்ளேன். 50 சதவீதம் மீதமுள்ளது. அங்கும் சென்று மக்கள் பிரச்னைகளை அறிந்து செயல்படுவேன் என்று கூறினார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications