'தரமான சரக்கு கொடுங்க சார்' தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்த மதுகுடிப்போர் சங்கம் !
சென்னை: தேர்தல் நேரத்தில் டாஸ்மாக் கடைகளில் போலி சரக்குகள் அதிகளவில் விற்கப்படுகின்றன. எனவே அதை தடுக்க அனைத்து கடைகளிலும், பார்களிலும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்பு உணர்வு சங்கம் மனு கொடுத்துள்ளது.
தமிழகத்தில் இம்மாதம் 17 மற்றும் 19ந் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்துவரும் நேரத்தில் மாநிலத் தேர்தல் ஆணையர் சீத்தாரமனை சந்தித்து மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநில தலைவர் செல்லப்பாண்டியன் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், தேர்தல் நேரத்தில் மது இலவசமாக கிடைப்பதால் புதியதாக குடிமகன்கள் உருவாகுகின்றனர். மது விற்பனையும் அதிகரிக்கிறது. இதைப்பயன்படுத்தி டாஸ்மாக் கடைகளில் போலி சரக்குகள் அதிகளவில் விற்கப்படுகின்றன. எனவே அதை தடுக்க அனைத்து கடைகளிலும், பார்களிலும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், டாஸ்மாக் கடைகளில் 150க்கும் மேற்பட்ட மது வகைகள் உள்ளன. மதுபிரியர்களுக்கு பிடித்த சரக்குகள் மட்டுமே கடைகளில் விற்க வேண்டும். தேர்தல் சமயத்தில் மதுபிரியர்களுக்கு பிடிக்காத சரக்குகள் உள்ளன. போலி சரக்குகளும் உள்ளன. உயிர் இழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதை கண்காணிக்க சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்த வேண்டும். வேட்பாளர்களின் செலவு கணக்கில் மது வாங்கி கொடுத்ததையும் கொண்டு வர வேண்டும். தரமான சரக்குகள் கிடைக்க பில் கொடுக்க வேண்டும்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 'மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.கவுக்கு ஆதரவு அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.