காவிரி வாரியம் அமைக்கும் வரை ஜிஎஸ்டி கட்ட கூடாது.. சரத்குமார் வேண்டுகோள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்தாமல், மத்திய அரசிடம் எதிர்ப்பை புதிய விதத்தில் வெளிப்படுத்தவேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்கும
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்தாமல், மத்திய அரசிடம் எதிர்ப்பை புதிய விதத்தில் வெளிப்படுத்தவேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழக அரசியல்வாதிகள் குரல் கொடுத்து வருகிறார்கள். இதுகுறித்து சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது அறிக்கையில் ''தமிழர்களின் உரிமைகளை பெற்றிட, விவசாயத்தை காப்பாற்ற, அடிப்படை தேவைகளை பெறுவதற்கு என போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல், இரயில் மறியல், அரசு அலுவலகங்கள் முற்றுகை, தீக்குளிக்க முயற்சி, தீக்குளிப்பு என பல்வேறுவிதமாக நமது உணர்வை வெளிப்படுத்தினாலும் மத்திய அரசு எதற்கும் செவிசாய்க்காமல், உச்சபட்ச அதிகாரம் கொண்ட உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் இருப்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களை, ஏழு கோடி உயிர்களையும் உணர்வுகளையும் ஊதாசினப்படுத்துவதாகவே தெரிகிறது. நமது போராட்ட முறை நூதனமான முறையில் இந்தியா முழுவதும் திரும்பி பார்க்கும் வகையில் செய்யவேண்டும் என்று கருதுகிறேன்.'' என்றுள்ளார்.
மேலும் ''நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள், தங்கள் ஆட்சியை நிலைநிறுத்திக்கொள்ள வரிவசூலித்து வந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களுக்கு வரிகட்டாமல் இருந்தவர்தான், தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் வீரத்திற்கு பெயர்போன வீரபாண்டிய கட்டபொம்மன். அவர் பிறந்த பெருமைமிகு தமிழ்மண்ணில் நமது வீரத்தை நிலைநிறுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சரக்கு மற்றும் சேவை வரியை செலுத்தாமல் நமது எதிர்ப்பை வெளிப்படுத்தினால் என்ன என்று தோன்றுகிறது.'' என்றுள்ளார்.
அதேபோல் ''தமிழ்நாட்டில் மட்டும் 7.39 லட்சம் வணிக நிறுவனங்கள் சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துவதற்கு பதிவுசெய்யப்பட்டுள்ளன. கடந்த வருடம் ஜூலை 1 முதல் நவம்பர் 30 வரை வசூலிக்கப்பட்ட தமிழ்நாட்டின் சரக்கு மற்றும் சேவை (GST) வரி ரூ.8,739 கோடியாகும். அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், தொழில் புரியும் நிறுவனங்கள், வியாபாரம் செய்யும் வணிகர்கள் அனைவரும் சரக்கு மற்றும் சேவை (GST) வரி செலுத்தாமல் புறக்கணித்து எதிர்ப்பை தெரிவிக்கலாம் என்று தோன்றுகிறது.'' என குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் ''ஏனென்றால் தமிழகத்தில் வசூலிக்கப்படும் வரியானது இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களின் வளர்ச்சிக்கும் பயன்படுத்த படுவதால் அதை தற்காலிகமாக தடுத்து நிறுத்துவதற்கு முயற்சி எடுக்க வேண்டும். இந்த முயற்சிக்கு தமிழக அரசும் ஒத்துழைப்பு கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.'' என்றுள்ளார்.
ஆகவே ''மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) தமிழ்நாடு மூன்றாவது இடம் (2017 ஆம் ஆண்டு கணக்குப்படி) பிடித்திருக்கும் நிலையில் நம்முடைய இந்த வகை போராட்டம் மத்திய அரசின் செவிகளில் நேரடியாக சென்றடைவதற்கு இது சிறந்த வழியாக இருக்கும் என கருதுகிறேன்.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
முக்கியமாக ''அனைத்து வரி செலுத்தும் நிறுவனங்களும், வணிகர்களும் அவர்களுக்கு அறிவுரை கூறும் பட்டய கணக்காளர்களும் (Chartered Accountant) ஒன்றிணைந்து ஒருமித்த குரலுடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சரக்கு மற்றும் சேவை வரியை செலுத்தாமல் எதிர்ப்பை வெளிப்படுத்தினால் மட்டுமே நாம் வெற்றிகாண முடியும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.'' என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications