ஸ்டெர்லைட்.. கட்சி கொடி இல்லாமல் ஒரு லட்சம் மக்களை திரட்டி போராடுவோம்: வைகோ பேட்டி
கட்சி கொடி இல்லாமல் ஒரு லட்சம் மக்களை திரட்டி போராடுவோம் என வைகோ கூறியுள்ளார்.
Recommended Video

கோவை: உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதித்தாலும் தூத்துக்குடியில் ஆலையை இயங்க நாங்கள் விடமாட்டோம் என்றும் கட்சி கொடி இல்லாமல் ஒரு லட்சம் மக்களை திரட்டி போராடுவோம் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது. பிரதமர் மோடியின் கைப்பாவையாக அதிமுக அரசு செயல்படுகின்றது. சட்ட விரோதமாக சிவில் ஆடையில் இருந்த போலீசார் ஸ்நைப்பர் துப்பாக்கி மூலம் பொதுமக்களை குறிவைத்து சுட்டு கொன்றுள்ளனர். துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்த போலீசாரே தூத்துக்குடியில் வாகனங்களுக்கு தீ வைத்தனர்.
ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பில் தீ வைக்கப்பட்டது என தகவல் பரப்பப்பட்டது. ஆனால் அங்கு ஒரு சிறு சேதம் கூட கிடையாது. காவல் துறையினரே வாகனங்களை தீ வைத்து எரித்துள்ளனர். ஹிட்லர் பார்லிமென்டிற்கு தீ வைத்து விட்டு கம்யூனிஸ்ட்டுகள் மேல் பழி போட்டது போல தமிழக போலீசார் செயல்படுகின்றனர்.
மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துப்பாக்கி சூட்டிற்கு பொறுப்பு ஏற்று பதவிவிலக வேண்டும். தமிழக அரசு ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவான அரசு. உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதித்தாலும் தூத்துக்குடியில் ஆலையை இயங்க நாங்கள் விடமாட்டோம். கட்சி கொடி இல்லாமல் ஒரு லட்சம் மக்களை திரட்டி போராடுவோம்.
ஸ்டெர்லைட்க்கு எதிராக செயல்படுவதால் ஒவ்வொரு தேர்தலிலும் என்னை தோற்க வைக்க அந்த நிறுவனம் பணம் செலவழித்ததாக ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டுள்ளது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் நான் பணம் வாங்கிவிட்டதாக கூறி நாம் தமிழர் கட்சியினர் மதிமுகவை பற்றியும் என்னை பற்றியும் அவதூறு பேசிவருகின்றனர். 52 கோடி ரூபாய் பணம் வாங்கி விட்டதாக பிரபல டி.விக்களின் பெயரில் நாம் தமிழர் கட்சியினர் மீம்ஸ் போடுகின்றனர். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் நடைபெற்ற படுகொலைகளுக்கு காரணம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான். அதற்கு பொறுப்பேற்று, அவர் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும்.
இவ்வாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications