நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே மது ஒழிப்புதான்: ஸ்டாலின்
மதுரை: பெண்கள் சுயமரியாதையோடு வாழ வேண்டுமென்றால், திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிக்க முதல் கையெழுத்து போடுவோம் என்றும் கூறியுள்ளார்.
நமக்கு நாமே" விடியல் மீட்பு பயணத்தின் 6வது நாளான இன்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். முதலில் அவனியாபுரம் கிராமத்தில் மக்களோடு மக்களாக நடைபயணம் மேற்கொண்டார். அப்போது அந்த பகுதியில் உள்ள பால் வியாபாரிகள் இந்த ஆட்சியில் படும் துயரங்களை அவரிடம் எடுத்துரைத்தனர். பால் உற்பத்தி விலையை அதிகரித்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களையும் மு.க.ஸ்டாலினிடத்தில் அளித்தனர்.
கல்லூரி மாணவிகள்
அவனியாபுரத்திலிருந்து புறப்பட்ட ஸ்டாலின், திருப்பரங்குன்றம் சென்று, பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய மாணவிகள், தமிழகத்தில் பொது பிரச்சனைக்காக போராடுபவர்களுக்கம் கருத்து சுதந்திரத்திற்கும் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும், மாணவிகளின் கல்வித் தரத்தை உயர்த்த இந்த ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.
மகளிர் சுய உதவிக்குழு
மகளிர் சுயஉதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள் மு.க.ஸ்டாலினிடம் பேசும்போது, கடந்த 4 ஆண்டுகளாக வீட்டிலிருக்கும் நாங்கள், ஆண்களையே நம்பி வாழ வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தங்களுடைய தன்னம்பிக்கையை இழந்துவிட்டதாக வேதனை தெரிவித்தனர்.
திமுக ஆட்சியில் கடன்
திமுக ஆட்சியின் போது 4 லட்சத்து 41,311 மகளிர் சுயஉதவிக்குழு உருவாகக்கப்பட்டது என்று மதுரையில் பெண்களுடன் உரையாடிய மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.6,342 கோடி கடன் வழங்கியது திமுக ஆட்சி தான் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
பெண்களிடம் கலந்துரையாடல்
மாணவிகள் மற்றும் பெண்களிடம் பேசிய ஸ்டாலின், மாணவ, மாணவிகள், எதிர்கால தமிழகத்திற்கு வித்திடக்கூடியவர்கள் என்றும் உங்களின் கருத்துக்களும், உங்களுடைய எண்ணங்களும் மிகவும் அவசியம் என்பதை கருதித்தான் தொடரந்து உங்களுடன் உரையாடி வருகிறேன் என்றும் குறிப்பிட்டார்.
சுயமரியாதை
குறிப்பாக இங்கு நிறைய பெண்கள் கூடியிருக்கிறீர்கள், பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என தொடர்ந்து நிரூபித்து வருகிறீர்கள், உங்களுக்காக குரல் கொடுத்த காரணத்திற்காகவே ஈ.வே.ராமசாமியையே பெரியாராக்கியவர்கள் நீங்கள். சுயமரியாதையோடு பெண்கள் வாழ வேண்டுமென்றால், திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று, அவர்களிடம் ஸ்டாலின் வலியுறுத்தி பேசினார்.
நடைபயணம்
பின்னர் திமுகவைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அக்னிராஜ் அவர்கள் வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அங்கிருந்து புறப்பட்ட ஸ்டாலின், திருமங்கலம் தேவர் சாலையில், நடைபயணமாக சென்று மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
விவசாயிகளிடம் பேச்சு
உசிலம்பட்டி அருகே நக்கலாக்கோட்டையில் விவசாயிகளை மு.க.ஸ்டாலின் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இதன் பின்னர் ஸ்டாலின் பேசுகையில் விவசாயிகளின் ரூ.7 ஆயிரம் கோடி கடனை திமுக அரசு தள்ளுபடி செய்தது என தெரிவித்தார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மதுவிலக்கு அமல்படுத்துவதற்கு போடுவோம். தலைவர் கருணாநிதி சொல்வதைத்தான் செய்வார்.
விடிவு காலம் பிறக்கும்
திமுக ஆட்சியில் பணியில் அமர்த்தப்பட்ட சாலைப்பணியாளர்களையும், மக்கள் நலப்பணியாளர்களையும் அதிமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் பணியில் இருந்து நீக்கியதால் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டனர் என்று கூறினார் ஸ்டாலின். அதிமுக ஆட்சியில் ஆயிரக்கணக்கான முதியோருக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டு விட்டது. திமுக ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் விடிவுகாலம் பிறக்கும் என்றார்.