வளர்மதி மீது வழக்குப் போடுவோம்... மாஜி எம்.எல்.ஏ. யசோதா எச்சரிக்கை
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது அபாண்டமான, பொய்ப் புகாரை சுமத்தியுள்ள வளர்மதி மீது வழக்குத் தொடரப்படும் என்று முன்னாள் சட்டசபை காங்கிரஸ் தலைவரும், காங்கிரஸ் அறக்கட்டறை அறங்காவலருமான டி.யசோதா தெரிவித்துள்ளார்.
வளர்மதி கொடுத்த புகாரின் பேரில் சென்னை போலீஸார் ஏற்கனவே வழக்குத் தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் யசோதா வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆதாரமற்ற அவதூறு புகார்கள்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையில் தொலைபேசி உதவியாளராக பணியாற்றிய ஆர்.வளர்மதி காவல்துறையினரிடம் ஆதாரமற்ற அவதூறுகளை அடிப்படையாகக் கொண்டு 18.8.2015 அன்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
சில கருத்துக்களை நான் சொல்ல வேண்டும்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் அறங்காவலர் என்ற முறையில் இப்புகார் குறித்து சில கருத்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன். தொலைபேசி உதவியாளர் பணி அவசியமில்லை என்று கருதப்பட்டதால் அப்பணியிலிருந்து ஆர்.வளர்மதி நீக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்து கடந்த 5.1.2015 அன்று அவருக்கு வாய்மொழியாகச் சொல்லப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை சார்பாக 12.1.2015 அன்று பணிநீக்க ஆணை வழங்கப்பட்டது.
வக்கீல் நோட்டீஸ் அனுப்பியவர் வளர்மதி
இந்த ஆணைக்கெதிராக 23.1.2015 அன்று ஆர்.வளர்மதியின் வழக்கறிஞர் நோட்டீஸ் ஒன்றை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் தலைவருக்கு அனுப்பியிருந்தார். அதற்குப் பிறகு, இப்பிரச்சனை குறித்து தொழிலாளர் அலுவலருக்கு வளர்மதி 13.3.2015 அன்று மனுச் செய்திருந்தார். இதில் சமரசம் ஏற்படாததால் இப்பிரச்னைக்கு தொழிலாளர் அலுவலர், தொழிலாளர் நல நீதிமன்றத்தில் மனு செய்து, அது தற்போது நிலுவையில் உள்ளது.
அவதூறு குற்றச்சாட்டு
இந்நிலையில், 5 மாதங்கள் கழித்து கடந்த 18.8.2015 அன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், அறக்கட்டளைத் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அறக்கட்டளையின் நிர்வாக அலுவலர் நாராயணன் ஆகியோர் மீது பல்வேறு அவதூறு குற்றச்சாட்டுகளை கூறி, காவல்துறையிடம் புகார் மனு அளித்துள்ளார்.
ஏன் சொல்லவில்லை
சென்னை காவல்துறையினரிடம் வளர்மதி அளித்த புகாரில் கூறப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுக்களை 23.1.2015 அன்று அனுப்பப்பட்ட வழக்கறிஞர் கடிதத்திலோ, 13.3.2015 அன்று தொழிலாளர் அலுவலருக்கு அனுப்பப்பட்ட மனுவிலோ, எதையுமே குறிப்பிடாதது ஏன் என்று தெரியவில்லை. கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, பணியிலிருந்து நீக்கப்பட்ட வளர்மதி திடீரென கடுமையான குற்றச்சாட்டுக்களை காவல்துறையினரிடம் புகாராக தெரிவித்ததில் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.
வளர்மதியை வைத்த முடக்க முயல்வதா
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வெ.கே.எஸ் .இளங்கோவன் கடந்த 10 மாதங்களாக அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக எழுப்பிவரும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள முடியாத நிலையில் வளர்மதியைக் கொண்டு எப்படியாவது காங்கிரஸ் கட்சியை முடக்கவேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த அவதூறு புகார் இட்டுக்கட்டி தயாரிக்கப்பட்டுள்ளது.
பழிவாங்கும் நோக்கு
இப்புகாரில் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு என்ன ஆதாரம் என்பது குறித்து காவல்துறையினர் ஆய்வு செய்யாமல் பழிவாங்கும் நோக்குடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியின் கைப்பாவையாக காவல்துறை செயல்பட்டது மிகுந்த கண்டனத்துக்குரியது.
"அடி" வாங்கியிருந்தால் ஏன் தாமதமாக புகார்?
காவல்துறையினரிடம் 18.8.2015 அன்று வளர்மதி அளித்த புகாரில் தன்னை, தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், நிர்வாக அலுவலர் நாராயணன் அவர்களும் உருட்டுக் கட்டையால் தம்மை அடித்ததாகக் கூறியிருக்கிறார். இப்படி தாக்கப்பட்டவர் 8 மாதங்கள் கழித்து புகார் அளிக்க வேண்டிய அவசியம் என்ன? இப்புகாரை அளிப்பதில் அ.தி.மு.க.வினரின் தூண்டுதல் இல்லை என்று மறுக்கமுடியுமா? சம்பவம் நடந்த தேதியைக் கூட புகார் மனுவில் குறிப்பிடாதது ஏனோ? தாக்கப்பட்டதற்கான மருத்துவ சான்றிதழ் இருக்கிறதா? இச்சம்பவம் குறித்து அறக்கட்டளையின் மற்ற உறுப்பினர்களிடம் புகார் தெரிவித்தாரா?
இழிவுபடுத்திப் பேச மாட்டார் இளங்கோவன்
நீண்ட அரசியல் பாரம்பரியப் பின்னணியில் வளர்ந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எதையும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு பேசக்கூடியவரே தவிர, எவரையும் இழிவுபடுத்தி பேசக்கூடியவர் அல்ல.
வளர்மதிக்கு அதிகாரம் கொடுத்தது யார்?
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளைக்கு சொந்தமான 35 கடைகளின் பெயரை மாற்ற ஒரு கடைக்கு, ரூ.10 லட்சம் வீதம் ரூ.3.5 கோடி வசூலிக்கும் படி, வளர்மதியைக் கேட்டுக் கொண்டதாக இப்புகாரில் கூறியிருக்கிறார். இவ்வளவு பெரிய தொகையை வசூலிப்பதற்கு தொலைபேசி உதவியாளராக பணியாற்றிய வளர்மதிக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இப்படியெல்லாம் தொகையை வசூலிப்பதாகக் கூறுவதைவிட ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் வேறெதுவும் இருக்க முடியாது.
காமராஜரால் வளர்க்கப்பட்ட அறக்கட்டளை
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை இத்தகைய அவதூறு புகார்கள் மூலம் அடக்கி, ஒடுக்கி விடலாம் என்று நினைத்தால் அது பகற்கனவாகத் தான் இருக்க முடியும். பெருந்தலைவர் காமராஜரால் வளர்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் பாரம்பரிய பெருமையை சிதைத்து, இழிவுபடுத்துகிற வகையில் அவதூறுகளை கூறிய வளர்மதி மீது விரைவில் அவதூறு வழக்குத் தொடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.