இந்திய- திராவிட கட்சிகளைத் தவிர்த்து கூட்டணிக்கு வந்தால்... விஜய்க்கு சீமான் திடீர் அழைப்பு?
சென்னை: இந்திய மற்றும் திராவிட கட்சிகளைத் தவிர்த்து நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணிக்கு எந்த கட்சியாவது வந்தால் அது குறித்து பரிசீலனை செய்வோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதனால் தேசிய மற்றும் திராவிட கட்சி வரிசையில் இல்லாத நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்குதான் சீமான் மறைமுகமாக கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: உலகத்தின் 20 நாடுகள் ஒன்று திரண்டு நின்ற போது தன் நாட்டு மக்களை நம்பி படைதிரட்டி யுத்தம் செய்த தலைவன் பிரபாகரனின் பிள்ளைகள் நாங்கள். எனக்கு ஒரு தலைவன்; எனக்கு ஒரு தத்துவம்; எனக்கு ஒரு நோக்கம்; எனக்கு ஒரு கொள்கை; மொழி- இனத்தை முன்னிறுத்தும் அரசியல்; வேளாண்மையை முன்னிறுத்தும் தற்சார்பு பசுமை பொருளாதாரம் என இருக்கிறது. இந்த கோட்பாடுகள் சரியானவை என நினைத்து எங்களுடன் இணைந்து நிற்க வந்தால் யோசிப்போம்.

அதுவும் இந்திய- திராவிட கட்சிகளைத் தவிர்த்து யாராவது கூட்டணிக்கு வந்தால் யோசிக்கலாம். ஆனால் யாரும் வரமாட்டார்கள். கூட்டணி என்றால் சீட்டு, நோட்டு (பணம்) வேண்டும் என்பர். என்னிடம் இந்த இரண்டுமே இல்லை. ஆகையால் கூட்டணி குறித்து கேள்விகளை கேட்காமல் விட்டுவிடுங்கள். இந்த கேள்விகளுக்கு நானும் பலமுறை பதில் அளித்துவிட்டேன். இவ்வாறு சீமான் கூறினார்.
ஆனால் இந்த பேட்டியில், இந்திய- திராவிட கட்சிகளைத் தவிர்த்த கட்சிகளுடன் கூட்டணிக்கு தயார் என்ற கருத்தை சீமான் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமானது, இந்திய- திராவிட கட்சிகளின் வகைகளில் சேராமல் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் இயங்குகிறது. இதனால் சீமானின் இந்த கருத்து, நடிகர் விஜய்க்கு விடுக்கப்பட்ட மறைமுகமான அழைப்பா? என்ற கேள்வியும் எழுகிறது. தமிழக தேர்தல் களத்தில் தற்போதைய நிலையில் சீமான், விஜய் ஆகிய இருவரது கட்சிகளும்தான் தனித்து நிற்கும் சூழ்நிலையில் உள்ளன. ஆகையால் சீமானின் இந்த மறைமுக அழைப்பு விஜய்க்குதானா? என்கிற கேள்வி முன்வைக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications