பிள்ளைகளுக்கு செல்லம் கொடுக்கலாம்.. அதுக்குன்னு இதெல்லாம் ரொம்ப ஓவர்! அரசுப் பள்ளி ஆசிரியை ஆதங்கம்!

ஆசிரியர்கள் -மாணவர்கள் இடையே சுமூக நட்புறவு இல்லாததற்கு என்ன காரணம் என்பது பற்றி ஓர் அலசல்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆசிரியர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறார் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையும், கல்வியாளருமான உமா மகேஸ்வரி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அரசுப் பள்ளி ஆசிரியரை பள்ளிக்குள் புகுந்து பெற்றோர் தாக்குதல் நடத்திய விவகாரம் ஆசிரிய சமுதாயத்தினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர்களை கண்டாலே மாணவர்கள் பயந்து நடுங்கிய காலம் மலையேறி போய், இன்று மாணவர்களை கண்டு ஆசிரியர்கள் அச்சம் கொள்ளம் வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

ஒழுங்கீனச் செயல்கள்

ஒழுங்கீனச் செயல்கள்

''ஏறுனா ரயிலு.. இறங்குனா ஜெயிலு.. போட்டா பெயிலு..'' என்ற வசனத்துடன் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அரசுப் பள்ளி ஆசிரியரை அதே பள்ளியில் பயின்ற மாணவன் ஒருவன் மிரட்டிய வீடியோ காட்சிகளை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. இன்றளவும் சமூக வலைதளங்களில் அந்த வீடியோ வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதேபோல் சங்கரன்கோவில் அரசுப்பள்ளியில் ஆசிரியர் முன்பே நடனமாடி அவரை மாணவர்கள் நையாண்டி செய்த காட்சிகளையும் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஒழுங்கீனச் செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவது இப்படியாக தமிழகம் முழுவதும் பரவலாக அதிகரித்து வருகிறது. இதற்கு உதாரணங்களை சொல்ல வேண்டும் என்றால் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆசிரியர்களை கொண்டாடிய பெற்றோர்

ஆசிரியர்களை கொண்டாடிய பெற்றோர்

ஒரு காலத்தில் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் போதே ''கண்ணை மட்டும் விட்டுவிட்டு வேறு எங்கு வேண்டுமானாலும் அடித்து பாடம் சொல்லிக் கொடுங்கள், என் பிள்ளை படித்து பெரிய உத்யோகத்துக்கு போகணும்'' என ஆசிரியர்களை முழுமையாக நம்பி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை விட்டுச் சென்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில் ஆசிரியர்களை ஒவ்வொரு பெற்றோரும் கொண்டாடித் தீர்த்தனர். ''டீச்சரம்மா சொல்லிட்டாங்க.. டீச்சரம்மா சொன்னால் சரியாகத் தான் இருக்கும்.. வணக்கம் சார்.. வணக்கம் ஐயா.. ''என ஆசிரியர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி அவர்களை தங்கள் குடும்ப ஆலோசகர்களை போல் பாவித்த காலம் எல்லாம் இருந்தது.

நட்புறவு பாழ்

நட்புறவு பாழ்

ஆசிரியர்களும் வெறுமனே மதிப்பெண்களுக்காக மட்டும் பாடம் சொல்லிக் கொடுத்து கோழிப்பண்ணைகளில் கோழிகளை அடைத்து வைப்பது போல் மாணவர்களுக்கு கடிவாளம் போடாமல், புத்தகப் பாடத்தோடு மனிதப் பண்புகளையும், வாழ்வியல் நெறிமுறைகளையும் ஒரு காலத்தில் கற்றுக் கொடுத்தார்கள். இன்று அது போன்ற நிலை இருக்கிறதா என்றால் கேள்விக்குறிதான். எப்போது மதிப்பெண் தான் டார்கெட் என்ற நிலை உருவானதோ அப்போதே மாணவர் ஆசிரியர் இடையேயான நட்புறவு பாழாகி ஒருவரை ஒருவர் எதிரிகளை போல் மாற்றியது. இங்கு தான் மாணவர்கள் ஆசிரியர்கள் இடையே முரண்பாடு முற்றி ஒரு சில இடங்களில் மோதல் வரை போகிறது.

காலம் மாறிப் போச்சு

காலம் மாறிப் போச்சு

படிப்பறிவு இல்லாத காலத்தில் ஆசிரியர்களுக்கு சமுதாயத்தில் கிடைத்த மதிப்பும், மரியாதையும் இன்று கிடைக்கிறதா என்று பார்த்தால் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். 'ஆசிரியர்' என்ற உயர்ந்த பதவியை 'வாத்தி' என அழைக்கும் அளவுக்கு காலம் மாறிப் போய்விட்டது. மாணவர்களின் மன நிலை எப்போது எப்படி மாறக்கூடும் என்பதை யாராலும் யூகிக்க முடியாத சூழல் இன்று உருவாகியுள்ளது. இதற்கு பல உளவியல் காரணங்களும் உண்டு. பள்ளிகளில் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவர்களை அழைத்து கண்டித்தால் எதிர்த்து பேசிவிடுவார்களோ, அசிங்கமாக போய்விடுமோ என அஞ்சி ஆசிரியர்கள் பலரும் கண்டும் காணாமல் நமக்கேன் வம்பு என்பது போல் நடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

அக்கறையான வார்த்தை

அக்கறையான வார்த்தை

ஆனால் ஒரு சில ஆசிரியர்களுக்கு எப்பேர்பட்ட முரட்டு மாணவர்களும் பணிந்து போகக்கூடிய நிகழ்வுகளும் உண்டு. குறிப்பாக அந்த ஆசிரியர்கள் பெரும்பாலும் தமிழ் ஐயாக்களாக இருப்பார்கள். உருட்டல் மிரட்டலால் சாதிக்க முடியாததை அக்கறையான வார்த்தைகளால் தட்டிக்கொடுத்து மாணவர்களை நல்வழிப்படுத்துவார்கள். மாணவர்களை ஆசிரியர்கள் ஹேண்டில் செய்யும் விதத்தை பொறுத்து இது அமையும். இதனிடையே 2ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியர் அடித்துவிட்டதாக கூறி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் மீது பெற்றோர் தாக்குதல் நடத்தியிருப்பது தான் இப்போது ஆசிரியர் சமுதாயத்தினரிடையே பேசு பொருளாக உள்ளது.

பெற்றோர் செல்லம்

பெற்றோர் செல்லம்

இந்த நிகழ்வால் புதிதாக ஆசிரியர் பணிகளை தொடங்கியுள்ள லட்சக்கணக்கான ஆசிரியர்கள் எதிர்காலத்தை நினைத்து கலக்கம் அடைந்துள்ளனர். இப்போதே இது போன்ற சம்பவங்கள் நிகழ்கிறது என்றால் போக போக இன்னும் என்னவெல்லாம் நிகழக்கூடுமோ எப்படியெல்லாம் காலம் மாறுமோ என அச்சம் கொண்டுள்ளனர். இந்நிலையில் இது குறித்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையும், கல்வியாளருமான உமா மகேஸ்வரியிடம் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது; ''பிள்ளைகளுக்கு பெற்றோர் செல்லம் கொடுக்கலாம், அதில் தவறேதும் இல்லை. அதற்காக ஆசிரியரை இழுத்துப் போட்டு அடிக்கும் அளவுக்கு செல்வதெல்லாம் ஏற்க முடியாது ஒன்றாகும்.''

ஆசிரியர்களுக்கு பாரம்

ஆசிரியர்களுக்கு பாரம்

''மாணவர்களை அடிக்கக் கூடாது என்பன உட்பட பல்வேறு ரிஸ்டிரிக்‌ஷன்ஸளை ஆசிரியர்களுக்கு அரசு போட்டுள்ளது. இதனால் இப்போது யாரும் அடிப்பதில்லை என்று சொல்வதை விட திட்டுவது கூட இல்லை. ஒரு வகுப்புகு ஒரு ஆசிரியர் என்ற நிலைக்கு பதில் பல இடங்களிலும் ஒரே ஆசிரியர் பல வகுப்புகளையும் சேர்த்து பார்த்துக் கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. அதுமட்டுமல்ல புது புது திட்டங்களால் ஆசிரியர்களுக்கு பாரம் அதிகரித்துக் கொண்டே போகிறது. கோவில்பட்டி அருகே ஆசிரியரை பெற்றோர் தாக்கிய பள்ளியில் 5 மாதங்களாக ஆசிரியர் இல்லாமல் இப்போது தான் 2 மாதங்களுக்கு முன்பு ஒருவர் மாறுதலாகி வந்திருக்கிறார்.''

மாவட்ட கல்வி அதிகாரி

மாவட்ட கல்வி அதிகாரி

''புதிதாக வந்தவர் என்பதால் அந்த ஆசிரியருக்கு ஊரின் தன்மை தெரியாமல் இருந்திருக்கலாம். ஊர் மக்களின் குணாதிசயங்கள் தெரியாமல் போயிருக்கலாம். ஒரு பேச்சுக்கு அந்த மாணவனை ஆசிரியர் அடித்தார் அல்லது திட்டியிருந்தார் என்ற வைத்துக் கொண்டால் கூட அதற்கு பள்ளிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய நிகழ்வு ஏற்கவே முடியாத ஒன்று. தலைமை ஆசிரியரிடம் சொல்லலாம், மாவட்ட கல்வி அதிகாரியிடம் அந்த பெற்றோர் முறையிட்டிருக்கலாம். அதை விடுத்து தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்திற்குரியது''

 நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

''மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சட்டம் கொண்டுவரப்பட்டது போல் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என உமா மகேஸ்வரி கோரிக்கை விடுத்தார். எம்.ஜி.ஆர். நடிப்பில் உருவான பெற்றால் தான் பிள்ளையா திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதிய ''நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி'' என்ற பாடல் வரிகள் தான் நமக்கு ஞாபகம் வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+