ஜெயலலிதாவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவது கடினம்....!
- சித்தார்த் வரதராஜன்
உலகை ஆளுவது மன்னர் என்றாலும், அந்த மன்னரையே ஆளுவது நீதி... இது திருவள்ளுவப் பெருந்தகை 2000 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லி வைத்துப் போன குறளின் சாராம்சம். ஜெயலலிதா விவகாரத்திலும் அதுதான் நடந்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவித்து சிறைத் தண்டனையும் கொடுத்து சிறைக்கு அனுப்பி வைத்ததன் மூலம் தமிழக அரசியல் அரங்கில் மிகப் பெரிய வெற்றிடத்தை பெங்களூர் கோர்ட் ஏற்படுத்தி விட்டது. இந்த இடத்தை அவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் யாராலும் நிரப்ப முடியாது.
ஜெயலலிதாவின் கதை இத்தோடு முடியப் போவதில்லை.. அவர் அப்பீல் செய்யலாம், தண்டனையை நிறுத்தி வைக்க கோர்ட்டுகளின் உதவியை நாடலாம், கோர்ட்டுகளும் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிடலாம். ஆனால் முன்னாள் பாஜக எம்.பி. நவ்ஜோத் சிங் சித்து, முன்னாள் குஜராத் முதல்வர் மாயா கோட்னானி ஆகியோரது வழக்குகளில் ஸ்டே கொடுக்க நீதிமன்றங்கள் மறுத்தது போல ஜெயலலிதா விவகாரத்திலும் கோர்ட்டுகள் நடந்து கொண்டால், அவர் தொடர்ந்து தேர்தலில் பங்குபெறும் தகுதியை இழந்தவராகவே இருப்பார். நிச்சயம் 10 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலையும் தொடரும்.

சொத்துக் குவிப்பாளர்களே எச்சரிக்கை
ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு நாட்டின் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் ஒரு உறுதியான செய்தியைக் கொடுத்துள்ளது. குறிப்பாக சொத்துக்களைக் குவித்துள்ள, குவித்து வரும் அரசியல்வாதிகள், வங்கிக் கணக்குகளை நிரப்பிக் கொண்டிருக்கும், நிலங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கும், வர்த்தகத்தில் ஈடுபட்டு பணம் குவித்துக் கொண்டிருக்கும் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் இது ஒரு எச்சரிக்கை மணி.

தெரிந்தும் தவறு செய்யும் அரசியல்வாதிகள்
ஆனால் இன்று நாட்டில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளுக்குமே ஊழல் செய்தால் என்ன நடக்கும் என்பது நன்றாக தெரிந்திருக்கும் போதிலும் கூட அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை, நம்மை ஒன்றும் செய்யாது என்றே நினைக்கிறார்கள்.

காலத்தை வழக்குக்காக செலவிட்ட கருணாநிதி
18 வருட காலமாக ஜெயலலிதாவுக்கு எதிராக நடந்த வழக்கு என்பது அவரது பரம வைரியான கருணாநிதியின் அரசியல் தயாரிப்பாகவே பார்க்க முடிகிறது. தான் ஆட்சியில் இருந்தபோதெல்லாம் ஜெயலலிதா வழக்குக்கு எதிரான வலுவான
ஆதாரங்களைத் திரட்ட அவர் மெனக்கெட்டிருக்கிறார்.

அம்மாதான் எல்லாம்
அதிமுகவைப் பொறுத்தவரை ஜெயலலிதா மட்டுமே ஒரே அதிகார மையமாக திகழ்ந்து வருகிறா். நரேந்திர மோடியைப் போல, மாயாவதியைப் போல, மமதா பானர்ஜியைப் போல ஒன்றுக்கும் மேற்பட்ட அதிகார மையங்கள் மீது நம்பிக்கை வைக்காதவர் அவர். எனவே அதிமுகவில் நம்பர் 2, நம்பர் 3, நம்பர் 4 என்று எதுவும் இல்லை.

இன்னொருவர் வருவார்
2001ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று முதல்வர் பதவியை ஜெயலலிதா ராஜினாமா செய்தபோது, அவர் அடுத்த முதல்வராக ஓ.பன்னீர் செல்வத்தைத் தேர்வு செய்தார். இப்போதும் கூட யாராவது ஒருவர் அவரது பதவியை அலங்கரிக்கப் போகிறார். ஷீலா பாலகிருஷ்ணனின் பெயர் தற்போது அதிகமாக அடிபடுகிறது.

யார் வந்தாலும் கிரேஸ் போகாது
யார் வந்தாலும் சரி, என்ன நடந்தாலும் சரி, அதிமுகவுக்கான அந்த "கிரேஸும்", "அம்மா" என்ற அந்தப் பெயருக்கு உள்ள மவுசும், நிச்சயம் குறையாது என்பது எனது எண்ணம். முதல்வராக அவர் ஆட்சியிலும், நிர்வாகத்திலும், ஏன் இலவசப் பொருட்களிலும் கூட நீக்கமற நிறைந்திருந்தார்.

ஆனால் கஷ்டம்
இனிமேல் "அம்மா" மீதான பற்றுதலை அதிமுகவினர் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேபோல "அம்மா"வின் அரசியல் எதிரிகள் மீதான பழிவாங்குதல்களும் கூட அதிகரிக்கலாம். சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, கட்சியினருடன் எந்த அளவுக்கு தொடர்பு வைத்துக் கொள்வாரோ அந்த அளவுக்கு இனிமேல் ஆட்சியின் போக்கும் இருக்கலாம். அதேசமயம், கர்நாடக சிறையில் அமர்ந்து கொண்டு அவரால் தமிழக அரசியல் லகானை இறுக்கமாக பிடித்துக் கொண்டு அதிமுக ஆட்சியை செலுத்துவது என்பது கஷ்டமான காரியம்.

மற்ற கட்சிகள் என்ன செய்யப் போகின்றன
தற்போதை சூழலில் ஜெயலலிதா சிறையில் அடைபட்டுள்ள நிலையில், இன்னொருவர் முதல்வராகப் போகும் நிலையில், பிற அரசியல் சக்திகள் எப்படிப்பட்ட நகர்வை மேற்கொள்ளப் போகின்றன என்பது ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளது.

கஷ்டத்தில் கருணாநிதி
ஜெயலலிதாவின் முக்கிய அரசியல் எதிரியான திமுக தலைவர் கருணாநிதி ஏற்கனவே உட்கட்சிப் பூசல்களாலும், ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட ஊழல் வழக்குகளிலும் சிக்கித் தவித்து வருகிறார். 2011 சட்டசபைத் தேர்தலில் திமுக மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது. லோக்சபா தேர்தலிலும் அது மூழ்கிப் போய் விட்டது. ஒரு சீட்டில் கூட அக்கட்சியால் ஜெயிக்க முடியாமல் போனது. எனவே ஜெயலலிதா இல்லாத நிலையில் திமுகவின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்பதை அறிய அக்கட்சியினரே ஆர்வமாக உள்ளனர்.

2 வருடத்தைத் தாக்குப் பிடிக்கனுமே
ஆனால் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் உறுதியாக 2 ஆண்டுகள் உள்ளன. இடையில் வேறு எந்த பெரிய தேர்தலும் வருவதாக இல்லை. எனவே அதுவரை திமுக எப்படிப்பட்ட நிலையில் தொடரும் என்பது முக்கியமானது.

மாற்றங்களைக் கண்ட 2011 - 14
2011 சட்டசபைத் தேர்தலின்போது தமிழக அரசியலில் பல பெரிய மாற்றங்களைக் கண்டார்கள் மக்கள். திமுக தனது கூட்டணிக் கட்சிகள் பலவற்றை உதறியது. அதேபோல தேர்தலின் போது கூட்டுச் சேர்த்துக் கொண்ட தேமுதிகவை, தேர்தலுக்குப் பின்னர் உதறியது அதிமுக. 2014 லோக்சபா தேர்தலில் திமுகவும், அதிமுகவும் தனித்துக் களம் கண்டன. மதிமுக, தேமுதிக, பாமக ஆகியவை பாஜக தலைமையில் ஒன்று கூடின.

கருணாநிதி நினைப்பது கஷ்டம்
இப்போது ஜெயலலிதா சிறையில் உள்ள நிலையில், சிதறிக் கிடக்கும் கட்சிகளை தன் பக்கம் கொண்டு வர திமுக முயற்சிக்கலாம். பிற அரசியல் கட்சிகளிடம் எப்போதும் நட்பு பாராட்டத் தயங்காத கருணாநிதி அதற்காக முயற்சிக்கலாம். ஆனால் 3வது அணியை உருவாக்க மிகச் சரியான சந்தர்ப்பம் இதுதான் என்பதால் பாஜகவை உதறி விட்டு மற்ற கட்சிகள் திமுக பக்கம் போகும் என்பது சந்தேகம்தான்.

ஜெயலலிதா முட்டாளா புத்திசாலியா...
தற்போதைய நிலையில் அனைவரது கவனமும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்த கவலையாகத்தான் உள்ளது. ஏற்கனவே பல இடங்களில் திமுகவினருடன் அதிமுகவினர் மோதியுள்ளனர். ஆனால் இந்த வன்முறைகளை கையை விட்டுப் போனால் அது அதிமுகவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டிய பொறுப்பும், கடமையும் ஜெயலலிதாவுக்கு உள்ளது. இதை சாக்காக வைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை எதிர்க்கட்சிகள் கோரலாம், முன்கூட்டிய தேர்தலையும் கூட கட்சிகள் கோரல வாய்ப்புள்ளது. எனவே ஜெயலலிதா சுதாரித்தால் இதிலிருந்து தப்பலாம். இல்லாவிட்டால் அவரை அவரே முட்டாளாக்கிக் கொள்ளும் நிலை ஏற்படும்.
(கட்டுரையாளர் சித்தார்த் வரதராஜன், ஷிவ்நாடார் பல்கலைக்கழகத்தின் பொது விவகாரங்கள் மற்றும் கிரிட்டிகல் தியரி மையத்தின் முது நிலை ஆய்வாளர் ஆவார்)












Click it and Unblock the Notifications