'எபோலா' ஏன் பீதியை கிளப்புகிறது?: அதை பார்த்து நாம் ஏன் பயப்படத் தேவையில்லை?
சென்னை: பீதியை கிளப்பும் எபோலை வைரஸ் பரவுவதை நினைத்து நாம் கவலை கொள்ளத் தேவையில்லை.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஆட்கொல்லியான எபோலா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நைஜீரியா, லைபீரியா, கினியா, சியர்ரா லியோனில் மட்டும் 900க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் வைரஸால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த வைரஸை நினைத்து உலக மக்கள் பீதியில் உள்ளனர். அவர்கள் பீதியடைய காரணங்கள் உண்டு.
சிகிச்சை
எபோலா காய்ச்சலுக்கு மருந்தே கிடையாது. அதனால் எபோலா வைரஸ் தாக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
மரணம்
எபோலா காய்ச்சல் வந்தால் சில நாட்களுக்குள் மரணம் ஏற்படும். காய்ச்சல், வலி, வாந்தி, பேதி, ரத்தப்போக்கு, சில சமயம் காது, மூக்கில் இருந்து ரத்தம் வழிதல் உள்ளிட்டவை ஏற்படும்.
பயம் வேண்டாம்
எபோலா வைரஸை நினைத்து பீதியில் இருந்தாலும் அதை பார்த்து பயப்படத் தேவையில்லை. அதற்கும் காரணம் உள்ளது.
அவ்வளவு எளிதில்
எபோலா வைரஸ் ஜலதோஷம் போன்று அவ்வளவு எளிதில் பரவாது. பாதிக்கப்பட்டவரின் ரத்தம், எச்சில், வியர்வை, சிறுநீர் உள்ளிட்டவற்றை தொட்டால் தான் வைரஸ் பரவும். அல்லது எபோலா காய்ச்சலால் பலியானவரின் உடலை இறுதிச் சடங்கின் போது கையாளுபவர்களுக்கு வைரஸ் பரவும்.
அறிகுறிகள்
எபோலா வைரஸ் தாக்கி 21 நாட்கள் கழித்து தான் அறிகுறிகள் தெரியும். அறிகுறிகள் தெரியாதவரை வைரஸ் பரவாது.