ஐடி ரெய்டில் சிக்கும் பணம், நகையை என்ன செய்வார்கள்?
வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனையில் வீடுகளில் சிக்கும் பணம் ரிசர்வ் வங்கியிலும், நகை வங்கி லாக்கரிலும் வைக்கப்படும். தேர்தல் நேரத்தில் கைப்பற்றப்படும் பணம் மாநில கருவூலத்துக்கு அனுப்பப்படும்.
சென்னை: வருமான வரி சோதனைக்கு பின் பிடிபடும் நகைகள் மற்றும் பணம் எங்கே கொண்டு செல்லப்படும் என்கிற கேள்வி எல்லாருக்கும் இருக்கிறது.
வருமான வரி சோதனையில் இரண்டு வகை உண்டு. தேர்தல் நேரத்தின் போது வாகனங்களிலோ மற்ற இடங்களிலோ பிடிபடுகிற பணம். இந்த பணம், அந்தந்த மாநிலத்தின் கருவூலத்துக்குக் கொண்டு செல்லப்படும்.
வருமான வரித்துறையினர் வீடுகளில் சோதனை செய்வது இரண்டாவது வகை. வீடுகளில் சிக்கும் பணம் இந்திய ரிசர்வ் வங்கிகளில் உள்ள லாக்கர்களில் வைக்கப்படும். ஆனால், அது டெபாசிட் கிடையாது.
அதேபோல் ரெய்டு எந்த வீட்டில் நடத்தப்பட்டதோ, அங்கு கிடைத்த நகையை, இரண்டு சாட்சிகளின் முன்னிலையில் மதிப்பிட்டு, கணக்கிட்டு அதை வங்கிகளின் லாக்கரில் வைப்பார்கள்.
அந்த வங்கியினர் லாக்கரின் இரண்டு சாவிகளைக் கொடுப்பார்கள். ஒன்று வருமான வரித்துறையினரிடமும் இன்னொன்று யாருடைய வீட்டில் நகைகள் கைப்பற்றபட்டதோ, அவரிடமும் கொடுக்கப்படும்.
நேற்றைய வருமான வரி சோதனையில் சிக்கிய பணம் தமிழக கருவூலத்துக்கு கொண்டு செல்லப்படும். ஏனென்றால் அது தேர்தல் நேரத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை என்பதுதான் காரணம்.