குடும்ப தலைவிகளுக்கு ஹாப்பி நியூஸ்! மாதம் ரூ 1000 எப்போது தொடங்கப்படும்? ஓப்பனாக சொன்ன ஐ.பெரியசாமி
திருப்பத்தூர்: கூட்டுறவுச் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 தொடர்பாக சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
கடந்தாண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக பல்வேறு விஷயங்களை முன்வைத்து பிரசாரம் செய்தது. அதேபோல தேர்தல் சமயத்தில் பல்வேறு முக்கிய வாக்குறுதிகளையும் அளித்தது.
இதன் காரணமாக திமுக கடந்த சட்டசபைத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தது. முதல்முறையாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்தது.
மக்களைத் தேடி மருத்துவம்..கடைக்கோடி மக்களையும் திட்டங்கள் சென்றடைய வேண்டும்..முதல்வர் ஸ்டாலின்
உரிமை தொகை
தேர்தல் காலகட்டத்தில் திமுக அறிவித்த வாக்குறுதிகளில் முக்கியமானது குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகை. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இருக்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பொதுமக்கள், அதிலும் குறிப்பாகப் பெண்களிடையே இந்தத் திட்டத்திற்கு மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்தது.
எதிர்பார்ப்பு
இப்போது திமுக ஆட்சி அமைந்து சுமார் 1.5 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இத்திட்டம் இன்னும் கூட நிறைவேற்றப்படவில்லை. திமுக அரசு வேறு பல வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ள போதிலும், இன்னும் இந்த உரிமை தொகை திட்டத்தை அறிவிக்கவில்லை. தமிழ்நாட்டில் நிதி நிலை மோசமாக உள்ளதாகவும் அது சரி செய்யப்பட்ட உடன் மிக விரைவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று திமுக அமைச்சர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்,
ஐ.பெரியசாமி
இதற்கிடையே இந்த குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகை திட்டம் தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சில முக்கிய தகவல்களைத் தெரிவித்து உள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் தனியார் மஹாலில் கூட்டுறவுத் துறையின் சார்பில் 69வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கேஆர்.பெரிய கருப்பன் கூட்டுறவுச் சங்க சேவை சரக்கு வாகனங்களுக்கான சாவிகளை வழங்கினர்.
கூட்டுறவு துறை
இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ பெரியசாமி, "கூட்டுறவுத் துறையும் அரசின் மற்ற துறைக்கு நிகராக நான்கு சதவீத அகவிலைப் படியை உயர்த்தி வழங்கியுள்ளோம்.. மேலும் சுமார் 6,500 புதிய பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் வரும் ஜனவரி மாதம் முதல் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இந்தியாவிலேயே பொது விநியோகத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தும் மாநிலமாகத் தமிழ்நாடு தான்.
உரிமை தொகை
அதேபோல கால்நடை பராமரிப்புக்கும் நாட்டிலேயே வட்டியில்லாக் கடன் கொடுக்கும் மாநிலமும் தமிழ்நாடு தான். சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் இப்போது வரை ரூ.40 கோடி அளவுக்கு வட்டியில்லாக் கடனை கொடுத்துள்ளோம். வரும் 6 மாதங்களில் ரூ.100 கோடிக்கு மேல் கூடுதலாகக் கடனை வழங்கத் திட்டமிட்டுள்ளோம். நாட்டிலேயே முதல்முறையாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 நம்ம முதல்வர் தான்.
முதல்வர் ஸ்டாலின்
இதில் நாட்டின் மற்ற மாநிலங்களில் உள்ள முதல்வர்களுக்கு எல்லாம் தமிழக முதல்வர் தான் முன்னோடியாக இருந்தார். வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்தத் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை முதல்வர் தக்க நேரத்தில் அறிவிப்பார்" என்றும் அவர் தெரிவித்தார். இந்த விழாவில் சிறந்த கூட்டுறவுச் சங்கங்களுக்குக் கேடயங்களும் வழங்கப்பட்டது.
ரேசன் அட்டைகள்
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் திட்டத்தில் பலன் பெற ரேஷன் அட்டைகளை குடும்பத் தலைவிகளின் பெயருக்கு மாற்ற வேண்டும் என்பது போல இடையில் தகவல் பரவியது. இதனால் பலரும் அவசர அவசரமாக ரேஷன் அட்டைகளை குடும்பத் தலைவிகளின் பெயருக்கு மாற்றினர். இருப்பினும், அது தொடர்பாகவும் அரசு எந்தவொரு அறிவிப்பையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.