இந்தக் கேவலத்தையெல்லாம் தமிழக மக்கள் எப்போது தடுத்து நிறுத்தப் போகிறார்கள்?
சென்னை: இளவரசி மகன் அதிமுக துணைப் பொதுச் செயலாளராகப் போகிறாராம். சசிகலா திட்டம் போட்டு வருகிறாராம். இந்த செய்தி அதிமுகவுக்கு முக்கியமோ இல்லையோ, தமிழக மக்களுக்கு முக்கியம். காரணம், இந்த அதிமுகதான் தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கிறது என்பதால். தமிழக மக்கள் எத்தனை காலத்துக்கு இதுபோன்ற கொடுமைகளையெல்லாம் சகித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை, புரியவில்லை.
ஜெயலலிதா இறந்தாலும் இறந்தார், தமிழகமே எடுப்பார் கைப்பிள்ளையாகி விட்டது. யார் யாரோ நாட்டாமை செய்து கொண்டிருக்கிறார்கள். அரசு நிர்வாகம் முடங்கிப் போயுள்ளது. மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறதா என்பதே தெரியவில்லை.
தமிழகத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்வதில்லை என்று அரசு ஊழியர்கள் கூறுகிறார்கள். எல்லாமே ஆந்திராவுக்கும், பிற மாநிலங்களுக்கும் திருப்பி விடப்படுவதாக சொல்கிறார்கள்.
என்ன நடக்கிறது தமிழகத்தில்?
தமிழகத்தில் இப்போது நடந்து கொண்டிருப்பது குழாயடிச் சண்டைதான். இந்த சண்டையில் அத்தனை முக்கியக் கட்சிகளும் ஏதாவது ஒரு வகையில் பங்கெடுத்துள்ளன. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ. அவர்களது ஒரே கவலை ஆட்சியும், அதிகாரமும், பணமும்தான்.
மக்களைப் பற்றி கவலையே இல்லை
எந்தக் கட்சிக்கும் மக்களைப் பற்றி உண்மையான கவலை, அக்கறை இருப்பதாக தெரியவில்லை. விவசாயிகள் பிரச்சினை அப்படியே கிடக்கிறது. தொடர்ந்து விவசாயிகள் செத்துக் கொண்டுள்ளனர். தடுப்பார் இல்லை, கவலை போக்குவார் இல்லை. டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் தொடர்கிறது. கவலைப்படுவார் யாரும் இல்லை.
அதிகாரம் - பண வெறி - ஆட்சி
ஆளும் கட்சியாக உள்ள அதிமுகவுக்கு இதையெல்லாம் கவனிக்க தற்போது நேரம் இல்லை. அவர்களது பெரிய கவலை ஆட்சி கவிழ்ந்து விடாமல் இருக்க வேண்டுமே என்பது மட்டுமே. காரணம், ஆட்சி பறி போனால் கூடவே அதிகாரம், பணம் எல்லாம் பறி போய் விடும் என்ற கவலைதான். கிட்டத்தட்ட இதே கவலைதான் ஓ.பி.எஸ். தரப்பு அதிமுகவுக்கும்.
தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் சுயநலமிகள்
இரு பிரிவு அதிமுகவையும் தூண்டி விட்டு மறைமுகமாக ஆட்டிப்படைத்து வரும் சில விஷமிகளுக்கோ, எப்படியாவது இவர்களை வைத்து தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற மறைமுக திட்டத்துடன் வலம் வந்து கொண்டுள்ளனர். ஆக யாருக்குமே தமிழக மக்களின் பிரச்சினைகள் பற்றி இப்போது எந்தக் கவலையும் இல்லை.
விளங்காமல் போன தமிழகம்
இந்த கேவலம் கெட்ட அரசியல்வாதிகளுக்கு நடுவில் சிக்கிக் கொண்டு தமிழமும், தமிழக மக்களும் சிதைந்து வருகிறார்கள். உண்மையில் சின்னாபின்னமாகியிருப்பது அதிமுக அல்ல.. பரிதாபத்துக்குரிய தமிழக மக்கள்தான். திக்கு திசை தெரியாமல், என்ன நடக்கிறது என்பதைக் கூட சரிவரப் புரிந்து கொள்ள முடியாத நிலைக்கு அவர்களைத் தள்ளி விட்டுள்ளன அத்தனை கட்சிகளும்.
பக்கத்து மாநிலங்கள் ஜொலிக்கின்றன
இப்படி தமிழகம் வறுபட்டுக் கொண்டுள்ள நிலையில் பக்கத்து மாநிலங்களின் ஆளும் கட்சிகள், தெளிவாக செயல்பட்டு தத்தமது மாநிலங்களின் தேவைகளை கச்சிதமாக நிறைவேற்றிக் கொணடுள்ளன. தமிழகத்திற்குத்தான் இப்படிப்பட்ட தெளிவான ஆட்சித் தலைமை இல்லாத பெரும் அவலம் ஏற்பட்டுள்ளது.
தண்ணீர்ப் பிரச்சினை
தமிழகம் முழுவதும் தண்ணீர்ப் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. ஆறுகள் எல்லாம் பாலைவனங்களாக காணப்படுகின்றன. தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க தமிழக அரசு என்ன செய்கிறது என்று கூடத் தெரியவில்லை. ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதா என்பதும் புரியவில்லை.
போராட்டமே வாழ்க்கையா?
தமிழக மக்களின் தினசரி வாழ்க்கை போராட்டக் களமாக மாறி விட்டது. எந்தப் பிரச்சினைக்கும் அவர்களுக்கு இயற்கையான தீர்வு கிடைப்பதில்லை. மாறாக போராடிப் போராடித்தான் ஒவ்வொன்றையும் பெறும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர் தமிழக மக்கள்.
ஸ்திரமற்ற ஆளுங்கட்சி தேவையா?
தமிழகத்தில் தற்போது நடந்து வருவது ஆட்சியல்ல. ஸ்திரமற்ற பெரும் குழப்பம். இதை ஆட்சி என்ற எந்த கணக்கில் சொல்வது என்றே தெரியவில்லை. இந்த ஆட்சியால் மக்களின் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு ஏற்படாத அவலம்தான் கண்கூடாக உள்ளது. இந்த நிலையில்தான் அதிமுக துணைப் பொதுச் செயலாளராக இளவரசியின் மகனை நியமிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எப்போது இந்தக் கேவலம் மாறும்?
யார் இந்த இளவரசி? இந்த இளவரசியின் மகன் எதற்கு அதிமுக துணைப் பொதுச் செயலாளராக வேண்டும்? இதெல்லாம் அதிமுகவினர் கவலைப்பட வேண்டிய விஷயம் மட்டுமல்ல. தமிழக மக்களும் இதுகுறித்து கவலைப்பட வேண்டும். காரணம், அதிமுகவின் கையில்தான் ஆட்சி உள்ளது. எனவே அந்தக் கட்சியின் தலைமையில் இருப்பவரும் நமக்கு முக்கியமானவர்தான்.
மாட்டோடு நின்ற மக்கள் புரட்சி
இந்தக் கேவலமெல்லாம் எப்போது மாறும்.. தமிழகத்திற்கு எப்போது விமோச்சனம் பிறக்கும்.. இயலாமையில் வெம்பிக் கொண்டுள்ள மக்களின் கேள்வி இது. ஆனால் ஜல்லிக்கட்டுக்காக போராடிய மக்கள் தங்களது தலைவிதி இப்படி தாறுமாறாக கிழித்து தோரணம் கட்டித் தொங்கப்படுவதைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருப்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.