அப்பல்லோ அப்டேட்ஸ்... 48வது நாளாக சிகிச்சையில் ஜெயலலிதா: வீடு திரும்புவது எப்போது?
முதல்வர் ஜெயலலிதா கடந்த 48வது நாளாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது டிஸ்சார்ஜ் எப்போது என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நிற்கவும், நடக்கவும் பயிற்சி அளிக்கப்படுவதாகவும், அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் அதிமுக தொண்டர்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் ஜெயலலிதா முகத்தை பார்க்கும் வரை எதையும் நம்பமாட்டோம் என்றே கூறி வருகின்றனர்.
தலைமைச் செயலகத்தில் கடந்த செப்டம்பர் 21ம் தேதி நடைபெற்ற மெட்ரோ ரயில் திட்டம் தொடக்க விழாவில் பங்கேற்ற முதல்வர் ஜெயலலிதா, மறுநாள் 22ம் தேதி இரவு காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 48 நாட்களாக சிகிச்சை தொடர்கிறது. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவினர், சிங்கப்பூர் பிசியோ தெரபிஸ்ட்டுகள் என 10க்கும் மேற்பட்ட மருத்துவக்குழுவினர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பிசியோதெரபிஸ்டுகள்
சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையிலிருந்து வந்த இரண்டு பெண் பிசியோதெரபிஸ்ட்தான் சிகிச்சை அளிக்கிறார்கள். அவர்கள் இப்போது ஜெயலலிதா எழுந்து நிற்கவும், நடக்கவும் பயிற்சி அளித்து வருகிறார்களாம். அண்ணா சாலையில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில்தான் அவர்கள் தங்கியுள்ளனர்.
போயஸ்கார்டனில் வசதிகள்
அப்பல்லோவுக்கு வந்து போக பிரத்யேகமான காரும், டிரைவரும் ஏற்பாடு செய்துள்ளார்கள். போயஸ் கார்டன் சாலையில் இருக்கும் ஜெயலலிதாவின் வீட்டுக்குச் பிசியோதெரபிஸ்ட் இருவரும் போய், முதல்வரை வீட்டுக்கு மாற்றும்போது தேவையான வசதிகள் அங்கே சரியாக இருக்கிறதா என்பதை அவர்கள் இருவரும் பார்த்திருக்கிறார்கள்.
முதல்வரின் தற்போதய நிலை
செயற்கை சுவாசம் கொடுப்பதற்காக முதல்வர் ஜெயலலிதாவின் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்து டியூப் சொருகப்பட்டது. தற்போது, செயற்கை சுவாசம் கொடுக்கும் நேரத்தை படிப்படியாக குறைக்கத் தொடங்கிவிட்டார்கள். எனினும் அந்த டியூப் இருப்பதால், வாய் வழியாக உணவு உட்கொள்வது முடியாது. அதனால், மூக்கில் உள்ள உணவுசெலுத்தும் டியூப் வழியாகத்தான் திரவ உணவுகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறதாம். அந்த டுயூப் அகற்றப்பட்டாலும் காயம் ஆறிய பின்னரே முதல்வர் வீடு திரும்புவார்
முகம் காட்டுவாரா ஜெயலலிதா
முதல்வர் சிரமமின்றி சுவாசிக்கும்வரை அந்த டியூப் இருக்கட்டும் என்பது அப்பல்லோ டாக்டர்களின் கருத்தாக இருக்கிறது. தொண்டையில் உள்ள டியூப் இன்னும் ஒருசில தினங்களில் அகற்றப்படலாம். அந்த இடத்திலிருக்கும் புண் ஆறுவதற்கு சில நாட்கள் ஆகலாம். புண் ஆறிய பின்னரே ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆக வாய்ப்பு உள்ளது. அதற்கு முன்னர் 4 தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிமுகவினருக்கு தன் முகத்தை காட்டுவாரா ஜெயலலிதா என்பதே தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.