பண மோசடி புகாரில் சிக்கிய தீபா... போலி வருமான வரி அதிகாரி அனுப்பப்பட்டதன் பரபர பின்னணி!
தேர்தலில் சீட் வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடி செய்ததாக தீபா மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய வீட்டிற்கு போலி வருமான வரி அதிகாரி அனுப்பப்பட்டது பாதிக்கப்பட்டவர்களின் வேலையாக இருக்கலாம
Recommended Video
சென்னை: தேர்தலில் சீட் வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடி செய்ததாக ஜெ. தீபா மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய வீட்டிற்கு போலி வருமான வரி அதிகாரி அனுப்பப்பட்டது பாதிக்கப்பட்டவர்களின் வேலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் தீபாவிடம் எவ்வளவு பணம், சொத்து இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக இந்த செட் அப் நாடகத்தை நடத்தினரா என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த முட்டை வியாபாரி ராமச்சந்திரன் என்பவர் நேற்றைய தினம் ஹைகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில் தன்னிடம் பேரவை, கட்சி அலுவலகம் மற்றும் ஜெ.தீபாவின் குடும்ப செலவுகளுக்காக ஜெ.தீபாவும், அவரது கார் ஓட்டுநரான ஏ.வி.ராஜாவும் 2017 பிப்ரவரி முதல் பல்வேறு காலகட்டங்களில் ரூ.1.12 கோடி பணம் பெற்றதாக கூறி இருந்தார்.
தேர்தலில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாகவும் பின்னர் அமைச்சராக்குவதாகவும் கூறியதன் அடிப்படையில்தான் அவர்களுக்கு பணம் கொடுத்தேன். ஆனால், அவர்கள் என்னை ஏமாற்றுகின்றனர் என தெரிந்து, பணத்தை திருப்பிக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தனர்.
பண மோசடி செய்தார் தீபா
இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தீபா மற்றும் ராஜாவின் பேச்சை கேட்டு பல லட்சங்களை நான் இழந்துவிட்டேன், ஆனால் எனக்கு பணமும் திரும்ப கிடைக்கவில்லை, பதவியும் கிடைக்கவில்லை.
காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை
எனவே, நான் அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த மனுவை விசாரித்த ஹைகோர்ட் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இது தொடர்பாக பிப்.12-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
தீபா வீட்டிற்கு அதிகாலையிலேயே வந்த நபர்
இந்நிலையில் தான் இன்று ஜெ. தீபாவின் வீட்டிற்கு அதிகாலை 5 மணிக்கே வருமான வரித்துறை அதிகாரி என்று கூறிக்கொண்டு ஒருவர் வந்துள்ளார். தீபா வீட்டில் இல்லாத நிலையில் மாதவனுடன் அவர் பேசிக்கொண்டிருந்துள்ளார். 10 மணிக்கு மேலும் 10 அதிகாரிகள் சோதனைக்கு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எதற்காக அனுப்பப்பட்டார்?
ஆனால் தீபாவின் வழக்கறிஞர்களுக்கு சந்தேகம் வரவே போலீசாருக்கு தகவல் கொடுக்க அவர்கள் வந்து விசாரித்த போது மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் போலி அதிகாரி தலைதெறிக்க தப்பியோடியுள்ளார். ஒருவேளை தீபாவால் பணத்தை இழந்த நபர் போலி அதிகாரியை அனுப்பி தீபா வீட்டில் எவ்வளவு பணம், நகை, சொத்து இருக்கிறது என்பதை அறிவதற்காக செய்த ஏற்பாடா இது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.