உள்ளாட்சித் தேர்தல்: 12 மாநகராட்சிகளில் யார் கொடி பறக்கும்? சீக்ரெட் சர்வே நடத்திய அதிமுக
சென்னை: உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் சம பலத்துடன் எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. 12 மாநகராட்சிகளிலும் யார் கொடி பறப்பது என்பதுதான் திமுக, அதிமுக இடையே இப்போதயை கவுரவப் பிரச்சினையாக உள்ளது. எந்த மாநகராட்சி யாருக்கு சாதகம் என்று அதிமுக சர்வே எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிட்ட நிலையில் ஆளும் அதிமுக தனது வேட்ளாளர்கள் பட்டியலை தயார் செய்துவிட்டதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
12 மாநகராட்சிகள்
சென்னை, மதுரை, கோவை,திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர், ஈரோடு,வேலூர், தூத்துக்குடி, திண்டுக்கல், தஞ்சாவூர் என 12 மாநகராட்சிகளிலும் வெற்றி யாருக்கு கனியும் என்று ரகசிய சர்வே நடத்தியிருக்கிறதாம் அதிமுக. இதில் சென்னையும், திருச்சியும் கனிவது கடும் சிரமம் என்று சர்வே டீமுக்கு தெரிவந்திருக்கிறதாம்.
வெற்றிக்கொடி
கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாநகராட்சிகளில் அதிமுகவின் கொடி பறப்பது உறுதி என்பது தெரியவந்துள்ளது. அதேபோல சேலத்திலும் வெற்றி உறுதிதான் என்பது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறதாம். தஞ்சையில் காவிரி தண்ணீர் ஜெயிக்க வைத்து விடும் என்றும் மதுரையிலும் அதிமுகவின் செல்வாக்கு குறையவில்லை என்றும் தெரியவந்துள்ளதாம்.
சிக்கலான மாநகராட்சிகள்
தூத்துக்குடி, திண்டுக்கல், வேலூர், நெல்லை மாநகராட்சிகளில் ஆளுங்கட்சி சற்று பலவீனமாகவே இருக்கிறதாகவும், சர்வே ரிப்போர்ட் கூறுகிறதாம்.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை இன்னும் சில தினங்களுக்குள் தேர்தல் ஆணையம் வெளியிட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்பாளர் பட்டியல் தயார்?
இந்நிலையில் அதிமுக ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் ஊராட்சி ஒன்றிய வார்டு, மாவட்ட கவுன்சிலர் வார்டு, மாநகர கவுன்சிலர் வரையில் ஒவ்வொரு பதவிக்கும் இரண்டு வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்து விட்டார்களாம். அதை மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் மூலமாக அதிமுக தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நம்பிக்கைதானே வாழ்க்கை
உள்ளாட்சி அமைப்புகளைக் கொத்தாகக் கைப்பற்ற கவுன்சிலர்கள் மூலம் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை தேர்வு செய்யும் தேர்தல் முறையை கொண்டு வந்துள்ளது. தேர்தல் அறிவித்த சில நாட்களிலே வேட்பாளர் பட்டியல் வெளியாகும். அனைத்து நகராட்சியிலும், ஒன்றியத்திலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் அதிமுக பிரமுகர்கள்.