அதிமுக கூட்டணியில் வேல்முருகன் கட்சிக்கு சீட் ஒதுக்காததன் காரணம் இதுதானாம்
சென்னை: அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஜெயலலிதா 7 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளார். அதேநேரத்தில் அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சியாக இருந்த பண்ருட்டி தி. வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரு இடம்கூட ஒதுக்கீடு செய்யப்படாதது ஏன் என்ற கேள்விதான் இப்போது அரசியல் களத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.
அதிமுக கூட்டணி தலைவர்களுடனான பேச்சுவார்த்தைக்கு வேல்முருகனும் அழைக்கப்பட்டிருந்தார். இதைத் தொடர்ந்து அதிமுகவின் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழுவுடன் வேல்முருகன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
அதிமுகவிடம் இரட்டை இலக்க தொகுதிகளை வேல்முருகன் கோரியிருந்தார். ஆனால் 5 தொகுதிகள் வரைதான் தர முடியும் என்றது அதிமுக.
இந்த நிலையில்தான் இன்று அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதிமுக 227 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவித்திருக்கிறது.
அதே நேரத்தில் நெய்வேலி, பண்ருட்டி, சங்ககிரி தொகுதிகளில் அதிமுக மேலிடம் டம்மி வேட்பாளர்களை அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நெய்வேலியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராஜசேகரரின் சகோதரர் தான் சொரத்தூர் ராஜேந்திரன். அவரும் குறிஞ்சிப்பாடியில் போட்டியிடுகிறார்.
அதேபோல் சங்ககிரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராஜாவிடம் அதிமுக மேலிடமே டம்மியாக நிறுத்துகிறோம் என்றே சொல்லியிருக்கிறது. பண்ருட்டி நகர்மன்றத் தலைவரான பன்னீர்செல்வத்தின் மனைவி சத்யாவை வேட்பாளராக அறிவித்திருக்கிறது அதிமுக. இந்த 3 தொகுதிகளுமே வேல்முருகன் கட்சி கோரிய தொகுதிகள். அனேகமாக இந்த 3 தொகுதிகள் வேல்முருகன் கட்சிக்கு வழங்கப்பட வாய்ப்பிருக்கிறது.
இன்று வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்புகூட வேல்முருகனுடன் அதிமுக குழு பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. அதிமுகவைப் பொறுத்தவரையில் 5 தொகுதிகள்தான் தர முடியும் என்பதுடன் ஒருசில நிபந்தனைகளையும் விதிக்கிறார்களாம். அந்த நிபந்தனைகளை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருக்கிறதாம் அதிமுக.
இருப்பினும் ஒருபோதும் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வேல்முருகன் போகமாட்டார்; எப்படியும் அதிமுகவுடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்து விடும் என்றே அக்கட்சியினர் நம்பிக்கையோடு இருக்கின்றனர்.
நாளை ஆலோசனை
இதனிடையே தற்போதைய சூழ்நிலை குறித்து விவாதிக்க தவாகவின் அவசர ஆலோசனைக் கூட்டத்தை வேல்முருகன் நாளை கூட்டியுள்ளார். அக்கூட்டத்தில் அதிமுகவுடனான பேச்சுவார்த்தை விவரங்கள், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.