நெற்றியில் பெரிய பொட்டு ஏன்? ரணகளத்திலும் விளக்கம் கொடுத்த தீபா
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் நெற்றியில் பெரிய பொட்டு இருப்பதைக் கண்டு கேள்வி கேட்ட நிருபர்களுக்கு தீபா விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: 'நான் நெற்றியில் பொட்டு வைக்கவில்லை என்று பெரிய குற்றச்சாட்டுக் கிளப்பி, என்னை வேற்று மதத்துக்காரராக பிரசாரம் செய்தனர் ' அதனை முறியடிக்கும் வகையில் நெற்றியில் பொட்டு வைத்துள்ளேன் என்று தீபா கூறியுள்ளார்.
நேற்று திடீரென போயஸ் தோட்டம் சென்று, ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தார் தீபா. அப்போது அங்கே கலவரம் நடந்தது. அதனால் கொதித்த தீபா, தன்னை குண்டர்களை வைத்து, சகோதரர் தீபக் தாக்க முயன்றார். கணவர் மாதவன் மற்றும் நண்பர் ராஜா ஆகியோரையும் தாக்க முயன்றார் என குற்றம்சாட்டி, போயஸ் தோட்டத்துக்குள்ளேயே சத்தம் போட்டார்.

இது தொடர்பாக, தீபா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், " ஜெயலலிதா மறைவுக்கு சசிகலாவும் அவரது குடும்பத்தினரும்தான் காரணம் என சொல்லி வந்தேன். இப்போது நடக்கும் காரியங்களையெல்லாம் பார்க்கும்போது, திட்டமிட்டு நடந்த மரணத்தின் பின்னணியில் எனது சகோதரர் தீபக்கின் பங்கும் உள்ளது என தெரிகிறது.
ஆரம்பத்தில் இருந்தே நான் தீபக்கை ஒரு போதும் நம்ப மாட்டேன். ஆனால், சமீப காலமாக, சசிகலா தரப்பின் பிடியில் இருந்து நான் வெளியே வந்து விட்டேன் என, என்னை சந்தித்து கெஞ்சினார். அதன் அடிப்படையில்தான், அவரை நம்பினேன். ஆனாலும் அவர் சசிகலாவின் பிடியில்தான் இருக்கிறார்.
நான், ஜெயலலிதாவின் சொத்துக்களை சட்ட ரீதியாகவும், முறைப்படியும் மீட்பதற்கான முயற்சியில் நான் இறங்கினேன். அதற்காக, டெல்லியில் உள்ள சட்ட நிபுணர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தேன்.
இந்தத் தகவல்களை எல்லாம், நல்லவன் போல எங்களோடு நாடகமாடி தீபக் தெரிந்து கொண்டான். அதை சசிகலா தரப்புக்குச் சொல்லியிருக்கிறான். அவர்கள், ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு நான் உரிமை கொண்டாடி எதையும் செய்துவிடக் கூடாது என திட்டமிட்டுள்ளனர்.அதற்கு, தீபக்கை பயன்படுத்துகின்றனர்.
எங்கள் பூர்வீக சொத்து போயஸ் கார்டன். அது, ஜெயலலிதாவின் ரத்த சொந்தம் - வாரிசான எனக்குத்தான் சேர வேண்டும். இதற்கான போராட்டத்தை நான், தனி மனுஷியாகவே எதிர்கொள்வேன்.
நான் நெற்றியில் பொட்டு வைக்கவில்லை என்று பெரிய குற்றச்சாட்டுக் கிளப்பி, என்னை வேற்று மதத்துக்காரராக பிரசாரம் செய்தனர். ஜெயலலிதாவின் வாரிசாக இருக்கும் நான், ஜெயலலிதாவின் இந்து மதத்தைச் சேர்ந்தவர்தான் என்பதைக் காட்டவே நெற்றியில் பெரிய பொட்டு வைத்துள்ளேன். மற்றபடி, எனக்கு மத வேற்றுமை பார்ப்பது எதுவும் என்னிடம் கிடையாது. எல்லா மதத்தையும் சமமாகத்தான் மதிக்கிறேன்." என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications