எம்எல்ஏவை பார்க்கும் பிரதமருக்கு என்னை பார்க்க மனமில்லையா? ... ஸ்டாலின்
பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவரை, விவசாயிகளை சந்தித்து பேச பிரதமருக்கு மனம் வரவில்லை என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரம்: எந்தவித பொறுப்பிலும் இல்லாத ஒருவரை சந்திக்கும் பிரதமர் மோடிக்கு பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவரை, விவசாயிகளை சந்தித்து பேச பிரதமருக்கு மனம் வரவில்லை என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இது அரசியல் ரீதியான சந்திப்பு அல்ல. மக்கள் பிரச்சினைக்காக சந்தித்து பேசினோம் என்றார்.
கோவில் குளம் தூர்வாரும் பணி செய்து வரும் ஸ்டாலின், நேற்று பேசிய போது, இது பிரதமர் மோடி , ஓபிஎஸ் சந்திப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

பிரதமருடன் சந்திப்பு
இரு தினங்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்து இருக்கிறார். அவர் இப்போது எந்தவித பொறுப்பிலும் இல்லை, சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார், ஆனால் அவர் சந்திக்க நேரம் கேட்டவுடன், உடனடியாக அனுமதி கொடுக்கப்பட்டு டெல்லிக்கு சென்று பார்த்து விட்டு வருகிறார்.

நேரம் கொடுக்காத பிரதமர்
தமிழக விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள், டெல்லிக்கே சென்று ஏறக்குறைய 50 நாட்கள் போராடினார்கள். அதுமட்டுமல்ல, மொட்டையடித்து, நிர்வாணப் போராட்டம் என பலவிதங்களில் போராடினார்கள். அந்த விவசாயிகள் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டபோது, பிரதமர் அதற்கு நேரம் கொடுக்கவில்லை.

எங்களை சந்திக்கலையே
விவசாயிகளின் பிரச்சினைகளை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளையும் ஒருங்கிணைத்து, அனைத்து கட்சி கூட்டத்தை நாம் கூட்டினோம். அந்த தீர்மானத்தை வழங்க அனைவரின் சார்பிலும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் வருகிறேன், கோரிக்கை மனு வழங்க வேண்டும் என பலமுறை கேட்டு, பல நாட்கள் காத்திருந்தோம். ஆனால், பிரதமரின் அலுவலகத்தில் இருந்தோ, இல்லத்தில் இருந்தோ எந்தவித பதிலும் இதுவரை வரவில்லை.

மனம் வரவில்லையே
ஆனால், எந்தவித பொறுப்பிலும் இல்லாத ஒருவரை பிரதமர் இன்றைக்கு அழைத்து பேசுகிறார். பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவரை, விவசாயிகளை சந்தித்து பேச பிரதமருக்கு மனம் வரவில்லை என்றால், நாடகத்தை நடத்திக் கொண்டிருப்பது திமுகவா? அல்லது திமுகவை விமர்சனம் செய்பவர்களா என்று கேட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications