விஷாலின் மனு நிராகரிப்பு... என்ன "ஆண்டவரே"! இந்நேரம் டுவீட்டியிருக்க வேண்டாமா?
விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக இதுவரை கமல்ஹாசன் கருத்து சொல்லவில்லையே ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: தமிழக அரசின் செயல்பாடுகளை எதிர்த்து அவ்வபோது டுவிட்டரில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் கமல்ஹாசனின், விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து இதுவரை மௌனம் சாதிப்பது ஏன்? என கேள்வி எழுந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காயத்ரி ரகுராம் சேரி பிஹேவியர் என்று கூறியதால் ஏற்பட்ட பிரச்சினையின் போது கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டதாக கூறினார் கமல்.
இதற்கு தமிழக அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார் கமல்ஹாசன்.
அமைச்சர்கள் பதிலடி
அன்றைய தினத்திலிருந்து தமிழக அமைச்சர்களுக்கும் கமலுக்கும் 7-ஆம் பொருத்தம்தான். ஊழல், நீட் தேர்வு, டெங்கு காய்ச்சல், போயஸ் கார்டனில் ரெய்டு, சிவாஜி மணி மண்டபம் விழாவில் முதல்வர் கலந்து கொள்ளாதது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மாநில அரசை கடுமையாக விமர்சித்தார். அமைச்சர்களும் பதிலடி கொடுத்தனர்.
விஷாலுடன் நட்புணர்வு
வெகு விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து கேள்வி எழுப்பியபோது அதுகுறித்து கமல் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. கமலும், விஷாலும் நெருக்கமான நண்பர்களாகிவிட்டனர். இதனால் நடிகர் சங்கத்தில் அறங்காவலர் குழுவில் முக்கிய பொறுப்பை கமலுக்கு விஷால் வழங்கினார்.
கமலின் வேட்பாளர் விஷால்
ஆர்.கே.நகர் தேர்தலில் ஆழம் பார்ப்பதற்காக நடிகர் கமல், விஷாலை வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற தகவல் இருந்தது. எனினும் விஷால் திடீரென சுயேட்சையாக ஆர்.கே.நகர் தேர்தலில் களமிறங்கினார். இந்நிலையில் நடிகர் விஷால் திங்கள்கிழமை தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
விஷால் புகார்
அதிமுக வேட்பாளர் மதுசூதனன் ஆதரவாளர்கள்தான் தனக்கு முன்மொழிந்தவர்களை மிரட்டியுள்ளார் என்று விஷால் கூறியுள்ளார். மேலும் தமிழக அரசே இதற்கு காரணம் என்றும் தன்னிடம் அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொண்டதாகவும் விஷால் புகார் அளித்துள்ளார். இருப்பினும் விஷாலின் வேட்புமனு நிராகரிப்பில் ஆளுங்கட்சி வேட்பாளருக்கு தொடர்பு இருப்பதாக புகார் கூறிய நிலையிலும் கமல் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை.
வருங்கால அரசியல்வாதிகள் ஓரணியில்...
விஷால் கூறும் நியாயத்தை வைத்து ஒரு கண்டனத்தை கமல் தெரிவித்திருக்கலாம் என்பது சமூக வலைதளங்களின் பேச்சு. வருங்கால அரசியல்வாதியாக உள்ள கமல்ஹாசன் சக கலைஞனுக்கும் பிரச்சினை என்றபோது குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்பதே அவர்களது விருப்பம்.