96ல் கிடைத்த சான்ஸை ரஜினி மிஸ் செய்தது ஏன்?.. இன்னும் தீராத ரசிகர்களின் மனக்குமுறல்#RajiniFansMeet
1996-இல் கிடைத்த நல்ல வாய்ப்புகளை ரஜினிகாந்த் தவறவிட்டது இன்று வரை ரசிகர்களின் மனக்குமுறலாக உள்ளது.
Recommended Video
சென்னை: கடந்த 1996-ஆம் ஆண்டு அதிமுக அரசின் மீதான அதிருப்தி இமயத்தைத் தொட்டிருந்தது. முற்றிலும் ரஜினிக்கு ஆதரவான சூழல் தமிழகத்தில் நிலவியது. மொத்த மாநிலமும் ரஜினியை இரு கரம் நீட்டி அழைத்தது. ஆனால் அதை அவர் தட்டி விட்டு விட்டார். அதுதொடர்பான மனக்குமுறல் இன்னும் ரசிகர்களை விட்டு நீங்கவில்லை.
கடந்த 1991-ஆம் ஆண்டு முதல்முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றார் ஜெயலலிதா. அந்த ஆட்சிக்காலத்தின் அவலம்தான் கடைசி வரை ஜெயலலிதாவை விடாமல் துரத்தி வீழ்த்தியது. சசிகலா குடும்பத்தினர் ஆடிய ஆட்டம், வளர்ப்பு மகன் கல்யாணம் என்ற பெயரில் நடந்த கூத்துக்கள் உள்ளிட்டவற்றால் மக்களின் ஒட்டுமொத்த அதிருப்திக்கும் ஆளானார் ஜெயலலிதா.
ஒட்டுமொத்த மாநிலமும் ஜெயலலிதாவுக்கு எதிராக இருந்தது. அப்போது ரஜினியும் ஜெயலலிதாவால் பாதிக்கப்பட்டார். அதனால் அவர் பொங்கி எழுந்தார். ஜெயலலிதாவுக்கு எதிரான அலை அப்படியே ரஜினிக்கு சாதகமாக மாறியது.
மாற்றத்தை விரும்பினர்
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அவர் வைத்ததுதான் சட்டம், எத்தனை அராஜகங்கள் தலைதூக்கின. அப்பப்பா... சசிகலா குடும்பத்தினர் ஜெயலலிதாவின் பேரை சொல்லி பாமரர்களின் சொத்துகளை கொள்ளையடித்ததாகவும் புகார்கள் எழுந்தன. இதனால் மக்கள் மாற்றத்தை விரும்பினர்.
ரஜினியின் முதல் அரசியல் பேச்சு
அப்போது வெடிகுண்டு கலாசாரம், ஆடம்பர திருமணத்தால் மிகவும் கொந்தளிப்புடன் இருந்த ரஜினி, ஜெயலலிதா மீண்டும் முதல்வரானால் தமிழகத்தை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று கூறி திமுக- மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவளிக்குமாறு ரஜினி கேட்டுக் கொண்டார். இதனால் இந்த கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
அமோக வெற்றி
ரஜினி கொடுத்த வாய்ஸால் அமோக வெற்றி பெற்ற திமுக-தமாக கூட்டணியை பார்த்த போது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் சற்று வேதனை அடைந்தனர். அடுத்த கட்சிக்கு வாய்ஸ் கொடுப்பதை விட்டுவிட்டு இவராகவே கட்சி தொடங்கியிருந்தால் மக்களுக்கு எத்தனை நன்மைகள் கிடைத்திருக்கும்.
மக்கள் அதிர்ச்சி
எந்த அதிமுக முறைகேடு செய்ததாகவும், ஊழல் செய்ததாகவும் மூப்பனாரின் கட்சி குற்றம்சாட்டியதோ அதே கட்சி அடுத்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. அப்போது நடந்த தேர்தல்களில் ரஜினி கொடுத்த வாய்ஸ் எடுபடவில்லை. காரணம், ஊழலை எதிர்த்து அதற்கு மாற்றாக குரல் கொடுத்த ரஜினி , அதே ஊழல் கட்சியுடன் தமாகா கூட்டணி வைத்த போது எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லையே என்ற ஆதங்கம் மக்கள் மனதில் இருந்தது. அதேபோல் காங்கிரஸ் கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்தநிலையில் திமுக தலைவர் கருணாநிதி அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டார். இதையும் ரஜினி ஏன் என்று கேட்கவில்லை.
ரசிகர்கள் குமுறல்
கிடைத்த நல்ல பல சந்தர்ப்பங்களை நண்பர்களை பகைத்துக் கொள்ள கூடாது என்ற எண்ணத்தில் உதறி விட்டு இத்தனை ஆண்டுகளாக நாடு முழுவதும் லஞ்ச, ஊழலில் சிக்கி தவித்து வருகிறதே என்ற ஆதங்கம் ரசிகர்கள் மனதில் இல்லாமல் இல்லை. இதை தவறவிட்டுவிட்டோமே என ரஜினியும் நிச்சயம் வருத்தப்பட்டிருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. இனியாவது சொன்னது போல் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி அவர் அரசியல் கட்சியை அறிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால் இவர்கள் நினைப்புக்கு மாறாக தனி கட்சி தொடங்காமல் பாஜகவுடனோ, புது எம்எல்ஏ தினகரனுடனோ கூட்டணி என்றால் அதன்பிறகு தமிழகத்தை இனி யாராலும் காப்பாற்ற முடியாது என்று அவர் 1996-இல் சொன்ன வசனம்தான் மக்களுக்கு நினைவுக்கு வரும் என்பதில் சந்தேகம் இல்லை.