கொஞ்ச நாளைக்கு முன்னாடிதானே புஷ்பாவிடம் சிரிக்கச் சிரிக்கப் பேசினார் ஜெ... அதுக்குள்ள என்னாச்சு??
சென்னை: அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்தின்போது ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவிடம் முதல்வர் ஜெயலலிதா சிரிக்கச் சிரிக்கப் பேசியிருந்த நிலையில் இப்போது அதிரடியாக அவரது பதவியைப் பறித்துள்ளது அதிமுகவினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் பெரிய சைஸ் மாலையை ஜெயலலிதாவுக்கு அணிவித்தபோது சசிகலாவிடம் ஜெயலலிதா புன்னகையுடன் ஏதோ பேச அதற்கு சசிகலா புஷ்பா முகம் முழுக்க சிரிப்புடன் காணப்பட்ட படமும் கூட வெளியாகியிருந்தது.
இப்படி சிரிக்க சிரிக்க சந்தோஷமாக இருந்த சசிகலா புஷ்பாவுக்கு இப்போது எப்படி திடீரென நேரம் சரியில்லாமல் போனது என்றுதான் தெரியவில்லை.
காந்திக்கு வந்ததை விட
உண்மையில் மகாத்மா காந்தியை விட அதிக சத்திய சோதனைகளைச் சந்திப்பது அதிமுகவினர்தான். ஒவ்வொரு நாளையும் கடப்பது என்பது கண்டத்தை கடப்பது போலத்தான்.
உக்காரலாமா.. வேண்டாமா!
"அம்மா"வை நம்பி தைரியமாக உட்காரலாமா வேண்டாமா என்ற அளவுக்கு ஒவ்வொரு நாளையும் அவர்கள் பயந்து பயந்துதான் கடக்க வேண்டியுள்ளது. காலையில் பதவியில் இருப்பவர் மத்தியானம் தூக்கப்பட்டு மாலையில் மீண்டும் வந்த கதைகள் அதிமுகவில் நிறையவே உள்ளது.
நடராஜ் கதை
முன்னாள் டிஜிபி நடராஜ் கதை அனைவரும் அறிந்ததே. யாரோ பேசியதற்காக இவர் பழி சுமந்து கேவலப்பட நேரிட்டது. மறுபடியும் உள்ளே இழுத்ததன் மூலம் அதிமுகவே கேவலப்பட்டுப் போனது.
சமீபத்தில் சம்பத்
சமீபத்தில் கூட நாஞ்சில் சம்பத் பதவியை இழந்து தெருவில் விடப்பட்டார். கம்பீரமாக வலம் வந்த சம்பத்துக்கு ஷார்ட் சர்க்யூட் கொடுத்து உட்கார வைத்து விட்டது அதிமுக தலைமை.
அடுத்த அடி சசிகலாவுக்கு
இந்த நிலையில்தான் சசிகலா புஷ்பாவுக்கு அடுத்த அடி கிடைத்துள்ளது. அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தின்போது அப்படி முகம் நிறைய சிரிப்புடன் வலம் வந்தார் சசிகலா. ஆனால் இப்போது அவரதை பதவியைப் பறித்து விட்டார் ஜெயலலிதா.
கோகுல இந்திரா
கோகுல இந்திராவுக்குப் பதவி போயுள்ளது. அவரது குருவான வளர்மதியிடம் இருந்த அதிமுக மகளிர் அணி செயலாளர் பதவியை இப்போது கோகுல இந்திரா பெற்றுள்ளார். இருவருக்கும் இடையே நல்ல நட்பும் உள்ளது.
உள்குத்தாக இருக்குமோ?
எனவே இவர்கள் இருவரும் சதி செய்து சசிகலாவை தூக்கி விட்டர்களோ என்ற குழப்பமும் அதிமுகவினர் மத்தியில் ஓடிக் கொண்டுள்ளது. ஆனால் இவர்களது லாபியெல்லாம் அம்மாவிடம் செல்லாது. சசிகலாதான் ஏதோ தப்பு செய்திருக்கிறார், அதனால்தான் பதவியைப் பறித்து விட்டிருக்கலாம் என்றும் பேசிக் கொள்கிறார்கள்.
என்னவோப்பா.. அதிமுகவைப் புரிந்த கொள்ளும் அளவுக்கு நமக்கெல்லாம் மூளை இன்னும் வளரவே இல்லைன்னு மட்டும் புரியுது!